பஞ்சாப் முதலமைச்சராக அமரிந்தர் சிங் இன்று பதவி ஏற்கின்றார்

பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் இன்று பதவி ஏற்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவராக அமரிந்தர் சிங் (வயது 75) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து சண்டிகாரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிற எளிய விழாவில், பஞ்சாப் மாநிலத்தின் 26-வது முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.

அவருடன் முதலில் 9 மந்திரிகள் பதவி ஏற்பர் என்றும், பின்னர் மந்திரிசபை விஸ்தரிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை அமரிந்தர் சிங் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். எனவே பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் பதவி ஏற்பது இது 2-வது முறை. ஏற்கனவே அவர் 2002-2007 காலகட்டத்தில் அங்கு முதல்-மந்திரி பதவி வகித்தார்.