ஒரு இலட்சம் மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதி: அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

 

அமைச்சரின் ஊடகப்பிரிவு

அரிசித்தட்டுப்பாடு எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை வழங்குயுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசியானது  களஞ்சியப்படுத்தப்பட்டு தேவையேற்படும்பட்சத்திலே சந்தைக்கு விடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.  

எதிர்வரும் புத்தாண்டில் எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பாவனையாளர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் பொருட்களின் விலைகளை எழுந்தமானமாக கூட்டி விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அரிசியை வியாபாரிகள் வேண்டுமென்றே பதுக்கி வைத்து அதன் விலையை செயற்கையாக அதிகரித்ததனாலேயே அரசாங்கம் நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டது. உள்ளுர் அரிசிக்கும் இறக்குமதி அரிசிக்கும் நிர்ணய விலை விதிக்கப்பட்ட பின்னரும் கூட வர்த்தகர்கள் அரிசியின் விலையை நிர்ணய விலையிலும் பார்க்க அதிகரித்து விற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் கிடைப்பெற்றன. இதனாலேயே நாடு முழுவதிலும் விசாரணை அதிகாரிகள் 24 மணிநேரமும் தேடுதல் வேட்டைக்கு அமர்த்தப்பட்டனர்.

கொழும்பில் விசேடமாக 2 குழுக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு முறைகேடான வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில்  அவர்கள் நிறுத்தப்படடு வருகின்றனர். இற்றைவரை 2000 க்கம் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்ப்டடு அவர்களில் 1500 மேற்பட்டோர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் 14 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்hர்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான சதொச விற்பனை நிலையங்களில்; தொகையான அரிசியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வியாபாரிகளுக்கென தனியான ஒரு விற்பனைப் பிரிவொன்றை ஆரம்பித்துள்ளோம். தேவையான வியாபாரிகள் சில்லறை விலையை விட 5 ரூபா குறைவாகப் பெற்றுக்கொள்ள முடியம். 

சதொசவில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவதோடு உள்ளுர் அரிசியையும் நிர்ணய விலையிலும் பார்க்க 2 ரூபா அல்லது 3ரூபா க்கு குறைவான விலையில் பெற்றுக்கொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

இதே வேளை நேற்று (2017.03.03) நுகர்வோர் அதிகாரசபை 63 வர்த்தக நிலையங்களில்  நடத்திய சுற்றி வளைப்பில் 56 வர்த்தகர்கள் அகப்பட்டனர். இவர்களில் அரிசியை கூட்டி விற்ற 34 வர்த்தகர்களும் உள்ளடங்குவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்தார்.