புழுத்த பொய்யர்களின் கொழுத்த அதிகாரத்தைக் கொய்ய, பழுத்த போராளிகள் முன்வர வேண்டும்

பஷீர் சேகு தாவூத் – முன்னாள் அமைச்சர் 

 

 “தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” என்ற ஒரு ஆவணத் தொகுப்பு வெளிவந்ததை அனைவரும் அறிவர். கணிசமானவர்கள் அதனை வாசித்து கருத்துக்களையும் பரிமாறி இருந்தனர். இவ்வாவண வெளியீட்டிற்குப் பதிலளித்து “தாறுஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்” என்ற ஒரு புத்தகம் வெளியிடப்படவுள்ளது என்பதை இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரையும், அட்டைப் படமும் தெரிவிக்கிறது. நான் இன்று பின்னேரம் அலுவலகம் ஒன்றுக்கு சென்ற வேளை அங்கு கூடி நின்ற சில துறை சார் வல்லுனர்கள் இப்புத்தகம் இதுவரை புழக்கத்துக்கு வந்ததாகத் தெரியவில்லை, நம் கையில் கிடைத்தால் மறைக்கப்பட்ட மர்மங்கள் ஆவணத் தொகுப்பையும், மறைக்கப்படாத உண்மைகள் புத்தகத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து நாம் ஒரு தொகுப்பை மக்கள் முன் வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டதைக் கேட்டேன். உடனே நானும் உங்களோடு இணைந்து கொள்ள அனுமதிப்பீர்களா என்று கேட்ட போது, மேலதிக தகுந்த ஆதாரங்களோடு வருவீர்களானால் உங்களையும் இணைத்துக் கொள்வோம் என்றனர். 

“தங்கம் கடத்தி வந்த வேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமையால் 1986 தொடக்கம் 1998 வரை தலைவர் உயிருடன் இருந்த போது நடைமுறைப்படுத்தப்பட்ட முஸ்லிம் காங்கிசின் யாப்பின் அத்தியாயம் 5.சரத்து1.e இன் பிரகாரம் பெருந்தலைவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு உங்கள் தொகுப்பை சமர்ப்பணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற எனது ஒரேயொரு கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் மறைக்கப்படாத உண்மைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

குறிப்பு:-
தலைவரின் காலத்தில் இருந்து இன்றுவரை தப்பிப் பிழைத்து வரும் மேற்படி ” கட்சி உறுப்பினர்களின் கடமைகள் ” என்ற தலைப்பிலான நமது கட்சியின் அந்த யாப்புச் சரத்து சரியாக நடைமுறைப் படுத்தப்படுமானால் தனிப்பட்ட பழக்க வழக்கங்களால் கட்சியின் மானத்தைக் கப்பலேற்றிய, இன்று கட்சியின் உச்ச பீடத்தில் இருக்கும் ‘ஆக உயர் பதவி வகிப்பவர்’ தொடக்கம் பலர் 2004 ஆம் ஆண்டிலேயே கட்சி உறுப்புரிமையில் இருந்து விலக்கப்பட்டிருக்க வேண்டும். 
இதனைப் பார்த்தவுடன் விசேட பேராளர் மாநாட்டைக் கூட்டியோ அல்லது அடுத்த பேராளர் மாநாட்டிலோ இவ்வாறான சரத்துகளும், கட்சியின் ஒழுக்கக் கோவையும் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதைக் குறித்து வைத்துக் கொள்வோம். 

இறுதியாகத் திருத்தப்பட்ட கட்சி யாப்பு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது விரைவில் மக்களுக்கு விநியோகிக்கப்படும். தலைவர் வாழ்ந்த காலத்தில் நமது யாப்பும், ஒழுக்கக் கோவையும் தமிழில் புத்தக வடிவில் வெளியிடப்படமை மூத்த போராளிகளுக்கு நினைவிருக்கும். புதியவர்கள் அவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்ளலாம். இப்போதெல்லாம் தமிழில் யாப்பைக் காணமுடியாமைக்கு மக்களும், போராளிகளும் இருட்டுக்குள் வைக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஏமாற்றுப் பேர்வழிகள் காரணமாகும். உண்மைகள் இன்னும் வெளிச்த்துக்கு வரும், மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் இல்லாவிட்டால் கண்கட்டி வித்தைகள் தொடரும்.