உங்கள் முதுகுத் தோலை உரித்து எங்கள் உரிமைப்பட்டயம் எழுதுவோம்…

சபதம்

வரட்டும் 
இன்னொரு தேர்தல் 
இனி வரட்டும்.

எங்கள் கால்களில் விழுந்து 
மடிப்பிச்சை கேட்டு நீங்கள்
மண்டியிடுவீர்கள்.

நீங்கள் 
சமூகத்தை எரித்த
சாம்பலைக் கொண்டே 
உங்களுக்குச்
சாதமிடுவோம்.

எங்கள் உரிமையைக்
கட்டிய சங்கிலி கொண்டே
உங்களைச் சிறைப் பிடிப்போம்.

எங்கள் நல்லவர்களின்
நரம்புகளைக்
கயிறாக்கி
உங்களைத்
தூக்கிலிடுவோம்

நீங்கள் ஏமாற்றிச் சேர்த்த
செல்வங்களைக் காய்ச்சி
உங்களைச் சுட்டெரிப்போம்.

உங்கள் பொய்களைக் கொண்டே
உங்கள் நாக்குகளை நாங்கள் 
பூட்டி வைப்போம்.

எங்களை அடிமையாய் விற்ற
ஏலச் சந்தையில் உங்களை
ஏற்றி விற்போம்.

எங்கள் பிரார்த்தனைக்
குளத்தில் உங்களைத் தாட்டு
நாங்கள் மூழ்கடிப்போம்.

உங்கள் பொறாமைத் தீயிலே 
உங்களைப் போட்டு இனிப்
பொசுக்கிவிடுவோம்

உங்கள் முதுகுத் தோலை உரித்து
எங்கள் உரிமைப்பட்டயம்
எழுதுவோம்.

இனி தோல்வியால் கவிழும்
உங்கள் தலைகளைக் கொண்டே
நாங்கள் கேடயம் செய்வோம்.

நீங்கள் தோற்றுவடிக்கும் 
கண்ணீரில் நாங்கள் 
தூண்டிலிடுவோம்.

எங்கள் சொல்லைத் தீட்டிச்
செய்த வாளால் 
உங்களைச் சூறையாடுவோம்.

எங்கள் எழுத்தை வளைத்து
ஏற்றிய வில்லால் உங்களை
எறிந்து விடுவோம்.

உங்கள் ஏமாற்றுவித்தையை
எங்கள் ஆஸா கொண்டு
நாங்கள் அடக்கி விடுவோம்.

உங்கள் 
தோல்வியைக் கொண்டே
எங்கள் தலைகளை நாங்கள்
இனித் தூக்கி வைப்போம்.

உங்கள் 
அலறலின் குரலால்
எங்கள் குழந்தைகளை
இனித் தூங்க வைப்போம்.

உங்களைப் புதைக்கும்
இடத்தில் இருந்தே நாங்கள்
புது யுகம் படைப்போம்.

நீங்கள் வேட்டைப் பற்களைத் 
துருத்திக் கொண்டு 
வெளியே வாருங்கள்.
நாங்கள் வேதப்புத்தகத்தைப் 
புரட்டிக்கொண்டு காத்திருக்கிறோம்.

எச்சரிக்கை.
எங்கள் இறைவன்
உங்களைவிடச் சதிகாரன்.