ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீனின் அவசர வேண்டுகோள்

நாம் இருவரும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்த போது, வெறுமனே சலாம் கூறிக்கொண்டு விலகிச் சென்றபோதும், நிறைய விடயங்களை மனம்விட்டுப் பேசவேண்டும் என்று நான் விரும்பியது போல், நீங்களும் விரும்பியதை உங்கள் கண்கள் சொன்னது.

மு. கா. தலைமை கிழக்கிற்கு வேண்டும் என்று, கிழக்கின் எழுச்சியை ஆரம்பித்த நாள் முதலாய் , உங்களின் தனிப்பட்ட விடயங்களைக் கொண்டு உங்களை விமர்சிப்பதில்லை என்று ஒரு சுய கட்டுப்பாட்டுடன் எமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். எமது உறுப்பினர்கள் அந்த விடயங்களில் எல்லை மீறிய போதெல்லாம் அவர்களைத் தடுத்து கண்டிக்கவும் நாம் தவறவில்லை.

விடுதலை வேண்டி, ஊன் உறக்கமின்றி, உயிர்களைப் பலி கொடுத்து, நோன்பு நோற்று , வளர்தெடுத்த எமது பேரியக்கம், எமது பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்காது, எம்மிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட வேதனையில்தான் நாம் கிழக்கின் எழுச்சியை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டது என்பதை உங்கள் மனச்சாட்சி நன்கு அறியும்.

எதிர்வரும் பேராளர் மாநாட்டில் கிழக்கைச் சேர்ந்த ஒரு ஆளுமையை மு. கா வுக்குத் தலைவராக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறா வண்ணம் பல முயற்சிகள் பல தந்திரங்கள் உங்கள் புறத்தில் இருந்து முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிகின்றோம்.

இந்த மாநாட்டை நடத்தவொண்ணாதவாறு ஒரு தடை உத்தரவை பெற எம்மால் முடியும்.
உங்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இடை நிறுத்துவதற்கு தேவையான ஆதாரங்களும் இப்போது எம்மிடம் உள்ளன. ( இது பஷீர் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுபவை அல்ல). ஆனால் இந்த இடத்தில் நாம் சற்று நிதானிக்கின்றோம்.

கடந்த பல வருடங்களாக, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் முகம் கொடுத்த மன உளைச்சல்களை நினைத்துப் பார்க்கிறோம். உங்கள் அருமை மகள் பல மாதங்கள் பாடசாலை செல்ல முடியாமல் போன நிலைமையை நினைத்துப் பார்க்கிறோம். இதிலிருந்து நீங்கள் தௌபாச்செய்து மீண்டதாக சொன்னதை நினைத்துப் பார்க்கிறோம். மீண்டும் இவை ஒரு அசிங்கமான பூதம் போல் கிழம்புவதை நாம் விரும்பவில்லை. அதனால் நாம் சற்று நிதானிக்கின்றோம்.

நீங்கள் சட்டம் படித்தவர். நான் அரசியல் விஞ்ஞானம் படித்தவன். எதிரி பலவீனமாக இருக்கும் போதே அடித்து வீழ்த்திவிட வேண்டும் என்பதை நாமிருவருமே நன்கறிவோம். எமக்கெதிரான உங்களது தரப்பினரின் முயற்சிகள் எல்லாம் பரிதாபகரமாக தோல்வியடைந்தன. இப்போது எங்களின் முறை. ஆனாலும் நாம் சற்று நிதானிக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு மஷூரா அடிப்படையில் முடிவெடுக்கக் கூடிய ஒரு தலைமைத்துவ சபை அமைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை உங்களால் உதாசீனப்படுத்தப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸுக்கென்று எம்மால் வரையப்பட்ட புதிய யாப்பையும் உங்களால் அங்கீகரிக்க முடியாமல் போயிற்று. உங்களுக்கிருக்கக்கூடிய நடை முறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு, இருக்கின்ற சிறு அவகாசத்தில் உங்களால் நிறைவேற்றக்கூடிய ஒரு விடயத்தை இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்க விளைகின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு வடக்கிற்கு வெளியேயான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக தொடர்ந்தும் நீங்கள் இருந்து கொண்டு, கிழக்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு புதிய பதவி நிலையை எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி நடைபெற உள்ள பேராளர் மாநாட்டில் உருவாக்குங்கள்.

அதை மிகவும் பொருத்தமான ஒரு கிழக்கின் ஆளுமைக்குக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அது உங்களிடம் பதவி கேட்டுப் பின்னால் திரிந்த எந்த ஒரு சுயநலவாதியாகவும் இருத்தலாகாது. அது பிரதநிதித்துவ அரசியலுக்கு ஆசைப்படாத ஒரு சமூக அக்கறையுள்ள ஒருவராக இருக்கட்டும்.

இந்த ஏற்பாடு மட்டுமே உங்களது தசாப்த கால மனஉளைச்சல்களுக்கு மனநிம்மதி தரக்கூடிய முடிவாக இருக்கும். இவைகள் நிறைவேற்றப்படாத இடத்து, இதன் பின் விளைவுகளை ஒரு ‘ஃபெல்லோ ரோயலிஸ்டாக’ என்னால் சகிக்கவோ ரசிக்கவோ முடியாது போகும். மாவோ சொன்ன ” நாம் எந்த ஆயுதத்தைக் கொண்டு போராடப் போகின்றோம் என்பதை, நமது எதிரிதான் தீர்மானிக்கின்றான்” என்பதில் நியாயம் காண்பவன் நான்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்

பி.கு :- இது ரௌஃப் ஹகீம் அவர்களை சென்றடையும்வரை அதிகம் பகிருங்கள்.