“நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?”

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் பல நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், உள்நாட்டுப் போரால் மோசமாக சிதிலமடைந்த சிரியா நாட்டில் உயிர்ப்பிழைத்து வசிக்கும் 7 வயது சிறுமி பானா அலாபத், தனது தாயாரின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். 
அந்த வீடியோவில் அலாபத், “நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?, சிரியாவில் உள்ள குழந்தைகளும் தீவிரவாதி போல தெரிகின்றனரா? அவர்களைப் பற்றி நீங்கள் நினைத்துப் பாருங்கள். உங்களது நடவடிக்கை மிகவும் மோசமானது. தடையை நீக்கவில்லை என்றால், எங்களது நாட்டையாவது அமைதியாக இருக்க விடுங்கள்” என பேசியுள்ளார்.
சிறுமி அலாபத்தின் இந்த புதிய வீடியோவானது சமூக வலைதளங்களில், தற்போது வைரலாக பரவி வருகின்றது. மேலும், சமூக வலைதள பயனாளர்கள் டிரம்பின் நடவடிக்கை குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை சொல்லி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.