வசீம் தாஜூடீனின் சகோதரரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி !

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, கொழும்பு நீதவான் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த சுனில் பெரேரா, வசீம் தாஜூடீனின் சகோதரருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டனர். 

மேலும் வசீம் தாஜூடீனின் சகோதரரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற அதிகாரிகள் அனுமதி கோரியதுடன் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் சந்தேக நபர்களை ஜனவரி 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.