நீரோ பிடில் வாசித்தது போல் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பொருத்தமற்றது: வட மாகாண முதலமைச்சர்

அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக விரைவில் பல மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளோம். அரசியல் யாப்பு ஒன்று புதிதாக வரப்போகின்றது அது திருத்திய யாப்பாக வரப்போகிறதா என்பது தொடர்பில் ஒரு மயக்கம் உள்ளது. இருந்தாலும் சில விடயங்களில் சில முன்னேற்றங்கள் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

குறிப்பாக எமக்குள் காணப்படுகின்ற மத்தி மாகாண அலுவலர்களில் உறவுகளில் முன்னேற்றம் காணப்படும் என நான் நம்புகிறேன். சிலர் சுயமாகவே வித்தியாசங்களை கூர்மைப்படுத்த முனைகிறார்கள் .

உண்மையிலேயே நாங்கள் யாவரும் கிளிநொச்சி மாவட்டத்திற்காகவே எங்கள் கடமைகளை மேற்கொள்கின்றோம் என்பதில் உறுதியாக இருந்தோமானால் எங்கள் மத்தியில் கீழான அலுவலர்கள் மாகாணத்தின் கீழான அலுவலர்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் போய்விடும்.எனவே வரும் வருடத்தில் கூடிய நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் காணவிளைவோமாக.

மாவட்டச் செயலகம் எவ்வாறு மத்திய அமைச்சுகளிடம் இருந்து நிதிகளை பெற்று அபிவிருத்தி பணிகளை செய்துகொண்டு போகின்றார்களோ அதுபோலவே நாங்களும் மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம். எனவே நாம் அனைவருமே கிளிநொச்சி மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்ற எண்ணப்பாடு உறுதியாக இருக்குமானால் எங்களிடையே வேறுபாடுகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மத்திய அரசாங்கத்துடன் நாங்கள் நெருங்கி எங்களுடைய கடமைகளை மேற்கொண்டு வருகின்றோம். இரு முக்கிய கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. ஒன்று வட மாகாணத்தின் தேவைகள் தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து நடத்திய கூட்டம். அதன் பூர்வாங்கல் வேலைகள் தற்போது இடம்பெற்று வருகிறது.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜநா ஸ்தாபனம் ஆகியவையோடு இணைந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அடுத்து பொருளாதார அபிவிருத்திகான குழு தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. முக்கியமான அலுவலர்களின் ஒன்று கூடல் இதுவரை நடைப்பெற்றிருக்கிறது. அடுத்த மாதம் பிரதமர் மந்திரி மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் விஜயம் செய்யவுள்ளனர். அவர்களுடன் இது தொடர்பில் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நாம் ஒற்றுமையாக ஒருங்கிணைந்த குரலில் எமது எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

எமது நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சுண்டிக்குளத்தில் மத்திய அரசாங்கத்தின் உள்ளீடுகள் சுற்றுச் சூழலுக்குள் அனுசரணையாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவைகள் சரணலாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பல இடங்களில் பல கட்டடங்கள் கட்டப்பட்டு அந்த இடத்தின் அமைதி குளைக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இவை பற்றி மத்தியுடன் கலந்தாலோசிக்கபடல் வேண்டும். இதற்கு அமைச்சர் விஜயகலா அவர்களும் அங்கஜன் அவர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இராணுவத்தின் பாரிய பணிகளை வனங்களில் கையகப்படுத்தியிருப்பதால் எமது பல வளங்கள் பாதிப்படைந்து வருகின்றன. வனங்களின் நடுவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ள படங்கள் கூகுள் இணையத்தளம் காட்டுகிறது. எமது வளங்கள் பல தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய நாம் அறியாமல் நீரோ பிடில் வாசித்தது போல் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பொருத்தமற்றது எனவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்