மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது :பிரதமர் உறுதி

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என மாகாண முதலமைச்சர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் தென், மேல், கிழக்கு, ஊவா மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் ஊடாக செய்ய எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து இதன்போது மாகாண முதலமைச்சர்களுக்கு பிரதமரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தினூடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது. தேசிய அபிவிருத்திக்காக மாகாண சபைகளை வினைத்திறன் மிக்கதாக பங்கேற்கச் செய்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடுகின்றதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு உரித்தான எந்த விடயங்களுக்கும் இந்த சட்டமூலத்தினூடாக நடைபெறாது என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யோசனைக்கு ஏற்றவாறான திருத்தங்களை நாடாளுமன்ற குழுநிலையில் முன்வைக்க சந்தர்ப்பம் இருப்பதாக இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பு குறித்து தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அதனால் தான் பங்கேற்கவில்லை என்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.