மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடத்தின் இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி, த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.  
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு மூலம் அதற்கான பல மும்மொழிவுகள் இந்த வருடம் முன்வைக்கப்பட்டிருந்தன. எனவே, வருடத்தின் இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதன் அடைவுமட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் அடுத்த வருடத்துக்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.