சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழு என்ன அடிப்படையில் அரசியல் சாசன விடயத்தில் செயற்பட போகின்றது?

suresh-peramachchantheran

இறைமை மற்றும் வடகிழக்கு இணைப்பு என்பன சாத்தியமில்லை எனின் சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழு அரசியல் சாசனத்தில் எந்த அடிப்படையில் செயற்பட போகின்றதென மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென, கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்ற சுமந்திரனின் கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக வடகிழக்கு இணைப்பு மற்றும் தமிழரின் சுயநிர்ணய உரிமை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும். சமஷ்டி அரசியல் அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும். இவை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அடிப்படையான அம்சங்களாகும். 

இவைக்கு எதிராக யாரும் பாரிய கருத்துப் பரிமாற்றங்களை செய்யவில்லை. இவற்றினை மேற்கோள்காட்டி தமிழ் மக்கள் பேரவையும் ஒரு தீர்வினை வெளியிட்ட போதிலும், பல மேடைகளில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசி வருகின்றார். 

இருந்த போதும், வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென 1995ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் ஏதோ ஒரு விதத்தில் தெரிவித்திருந்தார். 

ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என ஜனாதிபதியும் பல அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ள அதேநேரம், இறைமையை கேட்கவில்லை என சுமந்திரன் கூறியதாக பல செய்திகளும் வெளிவந்துள்ளன. 

என்னென்ன விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வு வர வேண்டுமென தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டதோ, அந்த தீர்வு இவ்வருடம் வருமென உறுதியளிக்கப்பட்டதோ, அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மக்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய சூழ்நிலையை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. 

1972ம் ஆண்டு குடியரசு யாப்பு மற்றும் 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த யாப்பின் உருவாக்கத்திலும் தமிழரசு கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் கலந்துகொள்ளவில்லை. 

புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் எனவே, ஒட்டுமொத்த மக்களும் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கோரியிருந்தார். 

அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆணையை கொடுத்துள்ளார்கள். 

ஆனால், தற்போது வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது என கூறப்படுவதுமட்டுமன்றி சமஷ்டி இல்லை. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு, என்ற சூழ்நிலை உருவாகி வருகின்றது. 

என்ன அடிப்படையில் சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழு அரசியல் சாசன விடயத்தில் செயற்பட போகின்றது என்பதனை தெளிவாக தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 

வெளிப்படைத் தன்மை இல்லாமல் பல விடயங்கள் நடந்துகொண்டு செல்கின்றன. எனவே, உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுகின்றதென்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.