மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி அலட்சியப்படுத்தியிருப்பது,அவர் மக்களை எந்தளவிற்கு புறக்கணிக்கிறார் என்பதற்கோர் எடுத்துக்காட்டு!

stalin1

சட்டசபை எதிர்க் கட்சித் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- இன்று முதல் வங்கிகளில் 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது, பெட்ரொல் பங்குகளில் 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். இப்படி தினம் தினம் மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகளால் பொதுமக்கள் எவ்வாறு சிரமத்திற்கு ஆளாகிறார்கள்?

பதில்:- ஒரே வழியில் சொல்வதென்றால், இந்த திட்டத்தை அறிவித்த பிறகு, மத்திய அரசு தொடர்ந்து ஏதோ சலுகைகள் தருவது போல சில அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே போகிறார்கள். அதனால் தான், நேற்றைய தினம் மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அழகான வார்த்தையில் சொல்லியிருக்கிறார், மத்திய அரசின் நிர்வாகம் ஒரு பெரிய தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுதான் உண்மை.

கே:- கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள். ஆனால், மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?

ப:- தொடக்கத்திலிருந்து இதைத்தான் சொல்லி வருகிறேன். ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு செயல்பட முடியாத நிலையில், நிர்வாகரீதியாக முடங்கிப் போயிருக்கிறது. அதுதான் உண்மை. அதனால்தான் இப்போது விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் உருவாகி இருக்கிறது. அப்படி இறந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லும் வகையில் எனது இந்த பயணம் அமைந்திருக்கிறது.

கே:- ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரையில் வரவில்லை. அப்படி வர வில்லையென்றால், அதற்காக தி.மு.க., போராட்டம் நடத்துமா?

ப:- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு வர வில்லை என்பது குறித்து ஊடகங்கள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும் இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டை கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தமிழக பாரதீய ஜனதா கட்சியினுடைய தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடமும் தான் கேட்க வேண்டும்.

நிச்சயமாக, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழ்நிலையை மத்திய அரசும், மாநில அரசும் உருவாக்கவில்லை என்று சொன்னால், உறுதியாக தலைவர் கருணாநிதியின் அனுமதியோடு, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் நிச்சயம் நடத்துவோம்.

கே:- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதற்கு பிரதமர் பதிலளிக்காமல் சென்று விட்டதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

ப:- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி அலட்சியப்படுத்தி இருப்பது, பிரதமர் மக்களை எந்தளவிற்கு புறக்கணிக்கிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.