பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர்- எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு !

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

625_fotor

குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இன்று (08) இடம்பெற்றது.

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கிலே காணப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெளிவு படுத்தியுள்ளார்.

 

பொதுமக்களின் காணிகள் விடுப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை விபரித்ததோடு இந்த காணிவிடுவிப்புகள் இன்னும் துரிதகதியில் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பின் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப் போன்று தொடர்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், கடந்த காலங்களில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் போது பிரித்தானியா ஆற்றிய பங்களிப்பை வரவேற்றதோடு தொடர்ந்தும் அத்தகைய பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்திகூறினார்.

 

மேலும், அரசியல் யாப்பு உருவாக்கம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கும் என இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே தெரிவித்தார்.