வடபுல முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்?

சுஐப் எம்.காசிம்   

புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம் இழைத்த தவறுக்கான பிராயச்சித்தமாக மீள்குடியேற்றத்தில் ஆர்வங்காட்டி இருக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். 

14958598_672539959578719_1330433801_n_fotor-1

முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “வன்னி விடியல்” அமைப்பினால் நாடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

14958741_672540002912048_1182960160_n

அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறியதாவது,

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு வழிகளிலும் தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் இருக்கும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. 

முல்லைத்தீவில் முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் காடுகளைத் துப்புரவாக்கிக் கொண்டிருக்கும்போது டோசர்களுக்குக் குறுக்கே குப்புறப்படுத்து அதனைத் தடுத்தார்கள். முசலி சிலாவத்துறைப் பிரதேசத்தில் பலகோடி ரூபா செலவில் பல்லாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் கைத்தொழில் பேட்டை ஒன்றை நாம் அமைக்க முயற்சி செய்த போது, அதற்குக் காணி வழங்க அனுமதி மறுத்து அதனை இல்லாமல் செய்தார்கள். யாழ்ப்பாணத்தில் மீளக்குயேறியுள்ள அகதிகளுக்கு ஓரங்குலக் காணியேனும் கொடுத்து உதவாது, ஒரு தற்காலிகக் கொட்டிலைத்தானும் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்காது தூரநின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

முஸ்லிம்கள் மீது குரோத மனப்பான்மை கொண்டு, அவர்களுக்கு எத்தகைய உதவிகளும் வழங்காத இந்த மாகாணசபை, முஸ்லிம் சமூகத்தை அரவணைத்துச் செல்கின்றது என்று எவ்வாறு நாங்கள் கூறுவது? இவ்வாறு கூறுவது சுத்த அபத்தமில்லையா? துரத்தப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தைப் பற்றியும், அவர்களின் நல்வாழ்வைப் பற்றியும் எத்தகைய சிந்தனையும் கொள்ளாத வடமாகாண சபையுடன் நாங்கள் ஒத்துப்போக வேண்டுமென்று அவர்கள் எண்ணுவது சரியா? எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை. நிரந்தரப் பகைவர்களும் இல்லை எனக் கூறுவார்கள். சந்தர்ப்பவாதிகள் பலர் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசியல்வாதிகளை அவர்களின் ஆதரவாளர்கள் போன்று காட்டி, தாங்கள் நினைத்தவற்றை சாதித்து விடுகின்றனர். அங்கே ஒரு காலும், இங்கே ஒரு காலும் வைத்துக்கொண்டும், ஆதரவாளர்கள்  போல் நடித்துக்கொண்டும் சிலர் எம்மை குழி தோண்ட நினைக்கின்றனர். 

எனது அரசியல் வாழ்விலே இவ்வாறானவர்கள் பலரை நான் அறிந்து வைத்திருக்கின்றேன். அண்மையில் முசலி, வெள்ளிமலையில் நான் பேசாத ஒன்றை பேசியதாக திரிபுபடுத்தி அதற்குக் கை,கால் வைத்து என்மீது அபாண்டப் பழிகளை சிலர் சுமத்தியுள்ளனர். 

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் இவற்றைத் தாங்கும் சக்தி இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு தினமும் கிடைக்கும் நச்சரிப்புக்களையும், ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் உள்வாங்கிக்கொண்டே எனது பணிகளை முன்னெடுத்து வருகிறேன். 

ஒருவனின் வெற்றியும், தோல்வியும், பதவியும், அதிகாரமும் இறைவனின் நாட்டமே. இறைவனின் நியதி இருந்தால், அவற்றை எவரும் தடுத்து நிறுத்த முடியாது என்ற நம்பிக்கை எங்களிடம் வந்துவிட்டால், எந்தக் கவலையும் நமக்கு இல்லை. 

முசலிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், நான் அன்று தொடக்கம் இன்று வரை எத்தனையோ பணிகளை மேற்கொண்டு இருக்கிறேன். மேற்கொண்டும் வருகிறேன். மீள்குடியேற்றத்திலோ, மக்களின் வாழ்வியல் தேவைகளை பெற்றுக்கொடுப்பதிலோ, அபிவிருத்தியிலோ, கட்சி மற்றும் பிரதேச வேறுபாடு காட்டி நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை. ஆசிரியர் இடமாற்றத்திலோ, அவர்களின் பதவி உயர்வுகளிலோ நான் எவ்விதத் தலையீடும் செய்யவில்லை. செய்யவும் மாட்டேன். நீங்கள் எவராவது நான் அவ்வாறு செய்தேன் என்று உங்கள் கைவிரலைச் சுட்டிக்காட்டி சொல்லவும் முடியாது.

ஆனால், நான் செய்கின்ற நல்ல பணிகளை ஜீரணிக்க முடியாத படித்தவர்கள் என தம்மைக் கூறிக்கொள்ளும் காழ்ப்புணர்வு கொண்ட சிலர், என்னைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி சமூகத்தை பிழையாக வழிநடாத்தப் பார்க்கின்றனர் எனவும் அமைச்சர் கூறினார்.