துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் ஊடுருவியதால் ரகசிய போலீஸ் அதிகாரிகள் டிரம்பை அவசரமாக மேடையை விட்டு வெளியேற்றினர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
7998872-3x2-700x467
தேர்தலுக்கு இன்னும் இருநாட்களே இருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டுவரும் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் டிரம்ப்பைவிட அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முதல் ஐந்து சதவீதம்வரை வெற்றிவாய்ப்பு மிக்கவராக காணப்படுகிறார்.

இந்த சரிவை சமன்செய்யும் வகையில் டொனால்ட் டிரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மேற்கு அமெரிக்காவில் உள்ள நெவேடா மாநிலத்தில் உள்ள ரெனோ நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் நேற்றிரவு உரையாற்றிகொண்டிருந்தபோது திடீரென்று மேடையில் தோன்றிய அவரது பாதுகாவலரான ரகசிய போலீசார், டிரம்பின் உடலை கேடயம்போல் மறைத்தபடி, அவரை மேடைக்கு பின்புறமாக அழைத்து சென்றனர்.

அதற்குள், மேடைக்கு எதிரே இருந்த ஒருநபரை உள்ளூர் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அந்த மர்ம நபர் துப்பாக்கியுடன் பிரசார கூட்டத்துக்கு வந்து டிரம்பை கொல்ல முயன்றதாக போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றியபின்னர், வாய்நிறைய சிரிப்புடன் மீண்டும் மேடையில் தோன்றிய டொனால்ட் டிரம்ப் தனது உயிரை பாதுகாத்தமைக்காக ரகசிய போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.

டிரம்ப்பை கொல்லும் நோக்கத்தில் வந்த அந்த மர்ம நபர் யார்? இந்த நோக்கத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.