ஜெயலலிதா எழுந்து வந்தால் யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரிய வரும் :திமுக துணைப்பொதுசெயலாளர்

m_id_426903_tn_cm_jayalalitha

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தெரியாமலே அவருடைய பல சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் கை ரேகை பதியப்படுகின்றது என திமுக குற்றம் சுமத்தியுள்ளது.

தர்மபுரியில் நடந்த திமுக மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணியின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப்பொதுசெயலாளர் துரைமுருகன் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அங்கு பேசிய துரைமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்ட போது முன்னாள் முதல்வர்கள் பலர் ஆட்சியை விட்டு சென்றுள்ளனர். 

தற்போது அதிமுக அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணம்.

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். அவர் தானே எழுந்து உணவு உண்ணுகிறார், பேசுகிறார் என்றெல்லாம் அதிமுகவினர் சொல்கிறார்கள். 

அப்படியென்றால் வேட்பாளருக்கு சின்னம் வழங்க ஏன் கைரேகை பதிக்கின்றனர். என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அவருக்கே தெரியாமல் பல சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் கைரேகை பதிக்கப்படுகின்றது என கூறி பரபரப்பை ஏற்படுத்திய துரைமுருகன் ஜெயலலிதா எழுந்து வந்தால், யார், யார் உள்ளே செல்வார்கள் என்பதும் தெரிய வரும் என்று கூறி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார்.

இன்னும் ஆறு மாதத்தில் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் என துரைமுருகன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.