மஹிந்த இன்னும் 2 வருடங்கள் ஆட்சி செய்திருந்தால் அவரால் வீதிக்கு இறங்க முடியாமல் போயிருக்கும்

மஹிந்த இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்திருந்தால் மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள். அவரால் வீதிக்கு இறங்க முடியாமல் போயிருக்கும். 

அதற்குப் பயந்துதான் இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும்போதே அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

vijayathasa wijaya

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துக் கூறிய அவர், இது தொடர்பில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

அந்த நிலைமையில் ஆட்சி தொடர்ந்திருந்தால் அவரால் வீதிக்குக்கூட இறங்க முடியாமல் போயிருக்கும். மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பர்.

அதற்குப் பயந்து கொண்டும், ஜெனிவாப் பிரச்சினைக்கு பயந்து கொண்டும்தான் மஹிந்த இரண்டு வருடங்கள் மீதமிருக்கும்போதே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். இப்போது அவர்கள் இனவாதம் பேசுகின்றனர்.

விக்னேஸ்வரன் வடக்கில் ஏதோ சொல்லி இருக்கின்றார். விக்னேஸ்வரன் அதை ஒரு தடவைதான் சொன்னார். ஆனால், தெற்கு அரசியல்வாதிகள் எத்தனை தடவைகள் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று பாருங்கள்.

வடக்கிலோ, தெற்கிலோ இனவாதம் பேசினால் அவர் இனவாதிதான் என்பதில் சந்தேகமில்லை. அந்த இரு தரப்பினரும் ஏற்படுத்துவது ஒரே மாதிரியான அழிவைத்தான்.

யார் என்ன சொன்னாலும் இனவாதத்துக்கு இடங்கொடுக்கமாட்டோம் என்ற வாக்குறுதியை நாம் இந்த நாட்டுக்கும் உலகுக்கும் வழங்கியுள்ளோம்.

தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் பேசுகின்ற பேச்சை தமிழர்கள் கேட்டால் வடக்கில் இராணுவம் இருப்பது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்குத்தான் என்றுதான் அவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.

அங்குள்ள பொலிஸாரையும், இராணுவத்தினரையும் இனவாத சிந்தனைக்குள் ஈர்க்கவே இவர்கள் முயற்சி செய்கின்றனர். தங்கள் இனம் மீது பற்று இருந்தால் இனவாதத்தை எதிர்க்க வேண்டுமே தவிர ஆதரிக்கக்கூடாது.

இனவாதம் பேசுகின்றவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு நாம் இடங்கொடுக்கமாட்டோம் என மேலும் தெரிவித்துள்ளார்.