மந்திரி சென்ற விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு: நேபாள விமான நிலையம் மூடப்பட்டது

நேபாள பிரதமர் பிரசண்டா நாளை மறுநாள் வியாழக்கிழமை இந்தியா வர இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி பிரகாஷ் ஷரன் மஹத் இந்தியா வந்திருந்தார். இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக இங்கு வந்த மஹத், தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நேபாள ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் சொந்த நாடு திரும்பினார்.

டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் அவருடன் 150 பயணிகள் இருந்தார்கள். நேபாளத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமான ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமான தரையிறங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் டயர் வெடித்தது. இதனால் விமானத்தில் லேன்டிங் கியர் சேதம் அடைந்து விமானம் சேதமானது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பாதுகாப்பு கருதி உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஓடுதளத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். டயர் வெடித்ததால் ரன்வேயும் சற்று சேதம் அடைந்துள்ளதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மந்திரி வந்த விமானத்தின் டயர் வெடித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.