கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் விழிப்புணர்வு நடமாடும் சேவையினை மங்கள யாழில் ஆரம்பித்து வைத்தார்!

கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று யாழில் ஆரம்பித்து வைத்தார். 
mangala samaraweera
வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதற்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 

வடமாகாண மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

மேலும் இந்த நடமாடும் சேவையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் பங்குபற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால், வழங்கப்படும் சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், கடவுச்சீட்டு சம்பந்தமான வழிகாட்டல்கள், பல்வேறு கொன்சியுலர் அலுவல்கள், இரட்டை பிரஜாவுரிமை மற்றம் குடியுரிமை பெறுதலுக்குரிய நடவடிக்கைகள் என்பன பற்றிய விழிப்புணர்வுகளையும் சேவைகளையும் வழங்கினார்கள்.