அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு உலமாக் கட்சி பாராட்டு..!

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப்  பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித வெற்றி கிடைக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

 இது பற்றி அக்கட்சி குறிப்பிட்டிருப்பதாவது, 

1970களில் ஹிங்குரானை சீனிக்கூட்டுத்தாபனத்துக்கென முஸ்லிம்களின் பல காணிகள் நஷ்ட ஈடு தருவதாக கூறப்பட்டு சுவீகரிக்கப்பட்டன. இவற்றில் கன்னியம்பத்தை, கல்மடுக்கண்டத்தின் குடுவில் காட்டுவெளிக்கண்டத்தில் உள்ள 319 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடோ மாற்றுக்காணியோ சீனிக்கூட்டுத்தாபனத்தால் வழங்காத மிகப்பெரிய அநியாயம் இந்த நாட்டில் நடந்தேற்pயது. குறிப்பிட்ட காணி உரிமையாளர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேயாரு காரணத்துக்காகவே இவர்களுக்குரிய நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

 இது பற்றி அதிகாரத்தில் இருந்த, இருக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் அக்கறை கொள்ளாதிருந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அ. இ. மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிடம் இது பற்றி முறையிட்டதைத்தொடர்ந்து இது விடயத்தில் அவரது அபார முயற்சி காரணமாக தமக்கு நியாயம் கிடைக்கும் வெளிச்சம் தென்படுவதாக உலமா கட்சியின் காரியாலயத்துக்கு வந்து இது பற்றி கூறிய பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தார்கள்.

 முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இருந்தும் இனவாதம் பார்க்கப்பட்டு காணிகளுக்கான நஷ்ட ஈடு வழங்காமையை ஒரு போதும் ஏற்க முடியாது. இந்த நிலையில் நல்லாட்சியின் நாயகர் கௌரவ மைத்திரிபால சிறிசேனாவின் இந்த ஆட்சியில் மேற்படி காணி உரிமையாளர்களுக்கான நஷ்ட ஈடு கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்புகிறார்கள். அம்பாரை மாவட்டத்தில் தமது கட்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாத நிலையிலும் கரும்புச்செய்கைக்கென காணிகள் களவாடப்பட்ட முஸ்லிம்களின் நஷ்டஈட்டுக்காக பெரு முயற்சி மேற்கொள்ளும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் சார்பிலும் உலமா கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.