சட்டவிரோத ஆடை இறக்குமதி காரணமாக வர்த்தக நிலையத்திற்கு சீல் : அமைச்சர் ரவி

 புறக்கோட்டை பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்து ஆடைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று வர்த்தக நிலையங்களில், சுங்கத் திணைக்களத்தின் விஷேட விசாரணை குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது, ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதம் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்யப்பட்டு பெருந் தொகை ஆடைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும் படி, நிதி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது.

இவ்வாறான மோசடிகள் காரணமாக வருடாந்தம் இலங்கைக்கு பில்லியன் கணக்கான நஸ்டம் ஏற்படுவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.