பாதுகாப்பு ஒத்திகையால் குழப்பம் : ஈபிள் கோபுரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

 

பிரான்சில் சமீப காலமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் நடைபெறுகின்றன. எனவே தலைநகர் பாரீஸ் மற்றும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் உள்ளது. இதை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அது போன்று நேற்று அங்கு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. தீவிரவாதிகள் தாக்குதலை போலீசார் முறியடிப்பது போன்று நடத்தப்பட்டது. அதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அதை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் தவறாக புரிந்து கொண்டார். தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துவதாக கருதி அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை வெளியேற்றினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.