யாழ். பல்கலை கழகத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல்

யாழ். பல்கலை கழகத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ் கலாச்சார முறைமை புறக்கணிக்கப்பட்டு சிங்கள கலாச்சார முறைமை பின்பற்றப்பட்டமையே மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோதல் சம்பவத்தால் யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு  மேல் பதட்டம் ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்தியதுடன் , காயமேற்பட்ட மாணவ , மாணவிகளை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்,

அத்துடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.