அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கேடயத்தை தாக்கி அழிப்போம்: வடகொரியா பகிரங்க மிரட்டல்

வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அந்த நாடு அதிர வைத்தது.
201607111315320696_North-Korea-to-take-physical-action-over-US-anti-missile_SECVPF
வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் வடகொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவிச் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும் என்று இருநாடுகளும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், சாத்தியமான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக தெரியவந்துதுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. தென்கொரியாவில் இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ள இடம் தெரியவந்த பின், அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்போம் என்று வடகொரியா மிரட்டியுள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டாக நிறுவவுள்ள ஏவுகணை தடுப்பு கேடயத்தை ஈவிரக்கமற்ற தாக்குதல் மூலம் அழித்து நிர்மூலம் ஆக்குவோம். இதை நிறுவ முயற்சிக்கும் தென்கொரியா மிகவும் பரிதாபத்துக்குரிய பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் வடகொரியா அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் இன்று எச்சரித்துள்ளது.