2018 அக்டோபரில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா நடத்துமா?

ஐ.சி.சி. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அதன்பின் தொடர்ந்து 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016-ல் நடத்தியது.

2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்குப்பின் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்கோப்பையை நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி அடுத்த டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவில் நடத்த ஐ.சி.சி. திட்டமி்ட்டிருந்தது. இதற்கிடையே அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க இருக்கிறது. 2019-ல் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரை உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். அத்துடன் ஐசிசி எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வருமானமும் கிடைத்தது. ஆகவே, இந்த வருமானத்தை இழக்க விரும்பாத ஐ.சி.சி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்கோப்பையை நடத்த திட்டமிட்டது.

இதற்குரிய முக்கிய ஆலோசனை எடின்பர்க்கில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. அப்போது 2018-ல் டி20 உலகக்கோப்பையை நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது உறுதியான முடிவு என்றாலும், இந்த மாதம் அக்டோபரில்தான் அதிகாரப்பூர்வமான முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்த தொடர் நடப்பது உறுதியானால் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்கோப்பை நடத்தப்பட இருப்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 8 அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.