ஷரியத் அடிப்படையிலான வசதிகளுடன் அறிமுகமான உலகின் முதல் விமானத்துக்கான அனுமதி ரத்து!

201606131542118046_Malaysias-Indians-owned-Sharia-compliant-airline-shut-down_SECVPF
இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்க்கை முறையான ஷரியத் சட்டங்களை தழுவிய புதிய விமானச் சேவையை மலேசியாவில் வாழும் இந்திய தம்பதியருக்கு சொந்தமான ரயானி ஏர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மலேசிய தலைநகரில் கோலாலம்பூரில் இருந்து அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாதலமான லங்காவி நகரை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் புறப்பட்ட இந்த சிறப்பு விமானத்தில் பறக்கும்போதே தொழுகை நடத்தும் வசதி உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு தேவையான பல வசதிகள் அளிக்கப்பட்டது.

ஹிஜாப் எனப்படும் முகத்திரை அணிந்த பணிப்பெண்கள் பயணத்தின் இடையில் ஹலால் வகையான உணவுகளை பரிமாறினர். மது வகைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த விமானச் சேவையில் பல குறைபாடுகள் இருப்பதாக மலேசிய விமானச் சேவை குழும இயக்கக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

கடைசிநேர பயண ரத்து மற்றும் காலதாமதமான புறப்பாடு மற்றும் விமான பயணத்தின்போது பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக புகார்தாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனடிப்படையில், விசாரணை நடத்திய மலேசிய விமானச் சேவை குழும அதிகாரிகள், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு  ரயானி ஏர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அந்நிறுவனம் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இந்தியருக்கு சொந்தமான ஷரியத் அடிப்படையிலான வசதிகளுடன் அறிமுகமான உலகின் முதல் விமானத்துக்கான அனுமதியை ரத்து செய்து மலேசிய விமானச் சேவை குழும இயக்ககம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பின்னர் மலேசிய விமானச் சேவை குழும இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஏற்கனவே இந்த விமானத்தில் செல்ல டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்து, பயணம் செய்ய இயலாதவர்கள் அந்த நிறுவனத்திடம் டிக்கெட்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.