ஒபாமாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

prime-minister-narendra-modi-during-a-bilateral-meeting-with-us-president-barack-obama-at-the-white-house_Fotor

 

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலை பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கல்பனா சாவ்லாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், நேற்று மதியம், ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையிலான ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருவரும் விவாதித்தனர். இணையதள பாதுகாப்பு பற்றியும் பேச்சு நடத்தினர்.

பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக மோடி குறிப்பிட்டார். இரு நாடுகளின் பொருளாதார உறவை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வது எப்படி என்பது பற்றி விவாதித்ததாக கூறினார்.

அதற்கு ஒபாமா, இரு நாடுகளும் ஆழமான, பரந்த நட்புறவை கொண்டிருப்பது இயல்பானது என்று கூறினார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவது பற்றி மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். அணுசக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியாவை சேர்த்துக்கொள்வதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார். அதற்கு மோடி நன்றி தெரிவித்து கொண்டார். இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

சர்வதேச அளவில், அணு ஆயுதப்பரவலை தடுப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு ‘என்.எஸ்.ஜி.’ என்று அழைக்கப்படுகிற அணுசக்தி வழங்கும் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த குழுமத்தில் இந்தியா உறுப்பினராக சேர விரும்புகிறது. ஆனால் இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அத்துடன் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வாஷிங்டன் ஆயுத கட்டுப்பாட்டு சங்கமும், இந்தியா உறுப்பினராக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இது தொடர்பாக, வாஷிங்டன் நகரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பெஞ்சமின் ரோட்ஸ், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அணுசக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியா இடம் பெற அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டு நடைபோடுகிறோம். இந்தியா அணுசக்தி பாதுகாப்பு நாடு என்ற வகையில், அதனுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நிறைய நேரம் செலவிடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.