அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதி!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும்  நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் வேட்பாளராக போட்டியிட 2,383 பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற நிலையில், நேற்று கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த தேர்தலில் தேவையான ஓட்டுகளை  பெற்றதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகியுள்ளார். இன்னும் ஆறு மாநிலங்களில் இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் மேலும் அதிகமான பிரதிநிதிகளின் ஆதரவை ஹிலாரி பெறுவார் என அவரது பிரச்சார மேலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களின் அபிமானத்தை அதிகம் பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை 1812 பிரைமரி மற்றும் கசாகஸ் பிரதிநிதிகளும் 571 சூப்பர் டெலிகேட்ஸ் பிரதிநிதிகளும் ஆதரித்துள்ளனர். அதேகட்சியின் மற்றொரு வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ், 1521 பிரைமரி மற்றும் கசாகஸ் பிரதிநிதிகள் மற்றும் 571 சூப்பர் டெலிகேட்ஸ் பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

முன்னதாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் உத்தேச வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டார். இதனையடுத்து, அமெரிக்காவின் அடுத்த அதிபர் பதவியை கைப்பற்ற வரும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் – டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய கருத்து கணிப்புகளின்படி, ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது. அவ்வகையில், அவர் வெற்றிபெற்றால் 239 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாறில் அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்புக்குரியவராக ஹிலாரி கிளிண்டன் உயர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.