குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் உடல் 10-ந்தேதி அடக்கம்

குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலியின் உடல் வருகிற 10-ந்தேதி அடக்கம் செய்யப்படுகிறது.

muhamed ali boxer
குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி (வயது 74) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். பார்க்சின்சன் என்ற நரம்பு மண்டல செயலிழப்பு நோயால் 32 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த முகமது அலி சுவாச கோளாறு காரணமாக பீனிக்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களாக தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் மறைவு குத்துச்சண்டை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.

முகமது அலியின் உடல், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வருகிற 10-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

முகமது அலியின் மகள்களில் ஒருவரான ஹனா அலி டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள உருக்கமான தகவலில், ‘முகமது அலியின் கடைசி தருணத்தில் நாங்கள் அனைவரும் அருகில் இருந்தோம். அவரை கட்டியணைத்த படியும், முத்தமிட்டபடியும், கைகளை பற்றிக் கொண்டும் இருந்தோம். பிரார்த்தனையும் செய்தோம். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த பின்னரும் கூட இதயம் மட்டும் துடிப்பை நிறுத்தவில்லை. சுமார் 30 நிமிடங்கள் இதயம் துடித்துக் கொண்டு இருந்தது. இது அவரது உடல் வலிமையை காட்டுவதாக இருந்தது. அவரை போன்ற ஒரு மாமனிதரை ஒரு போதும் பார்க்க முடியாது’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.