20ஆவது திருத்தத்தை ஆராய அமைச்சரவை உப-குழு !

images
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய  அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த அமைச்சரவை உப-குழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், பி.திகாம்பரம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

 

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள், பரிந்துரைகளை இந்த உப-குழு விரிவாக ஆராயும்.

அந்த உப-குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கை, அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தின் போது சமர்க்கப்படும் என்றும் அமைச்சரவைப்பேச்சாளர் தெரிவித்தார்.