யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது – ஒஸ்மானியாவில் அமைச்சர் ரிஷாட்

 

சுஐப் எம் காசிம்

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

7M8A3788_Fotor

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது பிரதேசத்திற்கு மீள் குடியேறச் சென்றுள்ள யாழ் முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், அமைச்சரின் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான பிரதிநிதி மௌலவி சுபியான் உட்பட முஸ்லிம் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். 

 

7M8A3724_Fotor

அமைச்சர் இங்கு கூறியதாவது,

யாழ்ப்பாணத்தில் நான் அரசியல் நடத்தவரவில்லை. மீள்குடியேற்றத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் எண்ணமும் எனக்கில்லை. நானும் உங்களைப் போன்ற அகதியே! யாழ் முஸ்லிம்கள் படுகின்ற அவதிகளை பலர் சொல்லக்கேட்டிருக்கின்றேன். 

மௌலவி சுபியான் போன்ற முக்கியஸ்தர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் நீங்கள் படுகின்ற கஷ்டங்களை எடுத்துரைப்பார். நான் இங்கு வந்த போது இந்த மக்களின் தங்குமிடத்திற்கு சென்று பார்த்தேன். மலசல கூடமின்றி அடிப்படை வசதிகளின்றி நீங்கள் படுகின்ற அவஸ்தைகளை நான் நேரில் கண்டேன். கவலை அடைந்தேன். குழந்தையொன்று தூங்கிக்கொண்டிருக்கும் போது அதை சுற்றி நுளம்புகள் சூழ்ந்த்து கொண்டிருந்ததை கண்டேன். மழைகாலங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் அமிழ்கின்றன. நீரை வெளியேற்றுவதற்கு முறையான வடிகான் வசதியில்லை. 

கச்சேரியில் நடந்த உயர்மட்ட மாநாட்டில் இவற்றை சுட்டிக்காட்டினேன். அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். பிரச்சினைகளை தீர்ப்பதில் அவர்கள் கடந்த காலங்களைப் போலன்றி இப்போது நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடிக்கின்றனர். மனம் திறந்து பேசினர். ஒத்துழைப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்தனர். 

அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள் என்பதில் எனக்கு இப்போது பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீங்களும் அதிகாரிகளுடன் அன்பாகப் பழக வேண்டும். மனம் திறந்து உங்கள் கஷ்டங்களை எடுத்துரையுங்கள். எடுத்ததற்கெல்லாம் அதிகாரிகளுடன் முரண் படாதீர்கள். நியாயமான கோரிக்கைகளை கேளுங்கள், இதுவே எனது வேண்டுகோள்.

நீங்கள் ஒற்றுமையாக இருக்க பழகிக் கொள்ளவேண்டும். அப்போது தான் உங்கள் பிரச்சினைகளை எவரும் எளிதில் தீர்த்துத் தருவார்கள். என்னதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் இஸ்லாமிய வழிமுறைகளிலிருந்து நீங்கள் நெறி பிறழ கூடாது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்டிப்பாகவும் கவனமாகவும் வளர்க்க வேண்டும். அவர்கள் கல்வியிலே முன்னேற்றம் அடைய நீங்கள் வழி காட்ட வேண்டும். பிள்ளைகளை மடியில் வைத்துக் கொண்டு சில தாய்மார்கள் தொலைக்காட்சியில் பொழுதைக் கழிக்கின்றனர். இது உங்கள் குடும்பத்தை குட்டிச் சுவராக்கும். இங்கு சில ஆண்பிள்ளைகள் கழுத்திலே மாலையுஜ் கையிலே காப்பும் போட்டுக் கொண்டு இருப்பதைக் காண்கின்றேன். இது நமக்கு நல்லதல்ல.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.