பெர்னி சாண்டர்ஸ் தொடர்ந்து வெற்றி – ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி

201604111101493764_victory-of-bernie-sanders-in-wyoming-shocks-hillary-clinton_SECVPF_Fotor

 

ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்க உள்ளது. அங்கு பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் வயோமிங் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடந்தது. இதில் அமெரிக்க முன்னள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி பெர்னி சாண்டர்ஸ்(74) வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியானது, பெர்னி சாண்டர்ஸ் கடைசியாக சந்தித்த 8 தேர்தல்களில் ஏழாவது வெற்றியாக அமைந்துள்ளது. பிரதிநிதிகள் வாக்கு அடிப்படையில் தற்போது முன்னணியில் உள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு பெர்னி சாண்டர்சின் தொடர் வெற்றி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றாக வேண்டும். ஹிலாரி கிளிண்டன் தற்போது 1,749 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரது போட்டியாளராக உருவாகி வருகிற பெர்னி சாண்டர்ஸ் 1,061 பிரதிநிதிகள் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

வரும் 19-ந் தேதி நியூயார்க் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 26-ந் தேதி பென்சில்வேனியா, கனெக்டிகட், டெலாவேர், மேரிலாந்து, ரோட் தீவு ஆகிய மாகாணங்களிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை ஹிலாரி கிளிண்டனும், பெர்னி சாண்டர்சும் வெகுஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, கொலராடோ மாகாணத்தில் குடியரசு கட்சியில் பிரதிநிதிகள் ஆதரவினை பெறுவதற்கு தேர்தல் நடந்தது. இதில் 13 பிரதிநிதிகளின் வாக்குகளையும் டொனால்டு டிரம்பின் போட்டியாளராக உருவாகி வருகிற டெட் குருஸ் பெற்று விட்டார்.

அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கு 1,237 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றாக வேண்டும் என்ற நிலையில், 743 ஓட்டுக்களை பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் முதலிடத்திலும், 520 ஓட்டுக்களை பெற்றுள்ள டெட் குருஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.