காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் முடியும் வரை உங்களோடு இருப்பேன் – சுமந்திரன்

mankala_ampar_003
இந்த நாட்டில் காணாமல்போன ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என ஆட்சியாளர்கள் கூறும் வரை நாம் மக்களுக்காக உரத்து குரல் கொடுக்கவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம் என்னும் தொனிப் பொருளில் நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

அம்பாறை மாவட்டத்தில் முதலில் இந்த நிகழ்வு ஏற்பாடாகி நடக்கின்றதை இட்டு பெருமையடைகிறேன், ஒரு சிலவிடயங்களை என்னால் பேச முடியாது. 

இந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு நபர் குறித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றவாளிக்கு சாட்சியமளித்த நபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர் வெளிநாடு சென்றிருந்தார். 

அது முன்னர் இருந்த அரசின் அகோரம்.  ஆனால் இன்று அது மாறியிருக்கிறது, இன்று குறிப்பிட்ட அந்த நபருக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுக்கின்றீர்கள். இதுதான் நல்லாட்சி, காணாமல் போனவர்கள் குறித்து இந்த அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது. 

mankala_ampar_007

 

காணாமல் போனவர்களின் பிரச்சினைகளை பார்க்கிலும் முக்கிய ஒரு சில விடயங்கள் இன்னும் மீதமிருக்கிறது. அதனாலேயே எங்களால் அரசின் பங்காளிகளாக இருக்க முடியாது. 

ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. அதற்காக உடனடியாக எதனையும் செய்துவிடமுடியாது, அரசு மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. 

உண்மையில் அனைத்தும் மாறிவிடவில்லை. ஜனாதிபதியும் அமைச்சர்களுமே மாறியிருக்கிறார்கள். அரச உயர் அதிகாரிகள் மாறவில்லை. 

இராணுவ அதிகாரிகள் மாறவில்லை, நான் ஜெனீவா மாநாட்டில் பிரத்தியேகமாக இளவரசர் செய்யித் அவர்களை சந்திக்க கிடைத்தது, அவர் அப்போது என்னிடம் கூறினார். 

பாதுகாப்பு விடயங்கள் மாற வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஒருசில மாற்றங்கள் நிகழும். அதற்கு காலஅவகாசம் தேவை என்றார். 

ஆகவே ஒரு சில விடயங்களை செயற்படுத்த முடியாது. ஆனால் என்னால் த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் ஒரு வாக்குறுதிகளை வழங்க முடியும். 

காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் முடியும் வரை உங்களோடு இருப்பேன், எமது கட்சியும் உடன் இருக்கும் என குறிப்பிட்டார்.