வங்கி கள உத்தியோகத்தர் ஒருவர் மீது முகமூடி அணிந்த கொள்ளைக்கோஸ்டியினர் தாக்குதல்

க.கிஷாந்தன்

 

 

தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவரை, முகமூடி அணிந்த கொள்ளைக்கோஸ்டியினர் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், கிராந்துரு கோட்டையில் 29.03.2016 மாலை இடம்பெற்றுள்ளது.

 

மகியங்கனை நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் கள உத்தியோகத்தரே, தாக்கப்பட்டு அவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகும்.கிராந்துரு கோட்டையின் மீனவ கிராமத்தில் கடன் பெற்றவர்களிடம் கடன் வசூல் செய்த வங்கி கள உத்தியோகத்தர் வங்கிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவர் பின்னால் வாகனமொன்றில் வந்த முகமூடியணிந்த சிலர் வங்கி உத்தியோகத்தரைத் தாக்கி, அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

தாக்கப்பட்டவர், மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.மேற்படி தாக்குதல், கொள்ளை குறித்து கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.