அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க சம்பள அறிவிப்பை வெளியிட்ட கலிபோர்னியா

timthumb_Fotor

 

அமெரிக்காவில் நாடு முழுவதும் வேலை செய்யும் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் ஒருமணி நேரத்துக்கு ஏழரை டாலர்களாக உள்ளது. இதன்படி ஒருநாளில் எட்டு மணிநேரம் உழைத்தால் அதிகபட்சமாக ஒருவர் 60 டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 4 ஆயிரம் ரூபாய்) சம்பாதிக்க முடியும் என்றநிலை கடந்த ஆறாண்டுகளாக நீடித்து வருகின்றது.

இந்த சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பிவரும் நிலையில், அமெரிக்காவில் உள்ள 14 மாநிலங்களில் உள்ள பிரபல நிறுவனங்கள் மட்டும் சம்பளத்தை ஓரளவுக்கு உயர்த்தி ஒருமணி நேரத்துக்கு பத்து முதல் பன்னிரெண்டு டாலர்கள்வரை அளித்து வருகின்றன.

இந்நிலையில், இன்னும் ஆறாண்டுகள் கழித்து, வரும் 2023-ம் ஆண்டுவாக்கில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் குறித்து நிர்ணயம்செய்ய கலிபோர்னியா மாநில கவர்னரின் ஏற்பாட்டின்பேரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு இடையில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதன்விளைவாக, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்களின் குறைந்தபட்ச புதிய சம்பளமாக ஒருமணி நேரத்துக்கு 15 டாலர்கள் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வரும் 2023-ன் ஆண்டிலிருந்து இனி இங்குள்ள ஒவ்வொரு தொழிலாளியும் தனது எட்டுமணி நேர உழைப்புக்கு 90 டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ஆறாயிரம் ரூபாய்) சம்பளமாக பெற முடியும்.

இதுதொடர்பான மகிழ்ச்சி அறிவிப்பை இன்று வெளியிட்ட கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன், வரலாற்று சிறப்புமிக்க இந்த சம்பள உயர்வை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்றும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய அறிவிப்பை கலிபோர்னியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் வரும் 2022-ம் ஆண்டு தொடக்கத்திலும், சிறிய நிறுவனங்கள் வரும் 2023-ம் ஆண்டு தொடக்கத்திலும் பின்பற்ற வேண்டும் என மாநில நிர்வாகம் இப்போதே உத்தரவிட்டுள்ளது.