எமது சிந்தனை, எமது மூச்சு எல்லாமே இந்த சமூகத்தைப் பற்றியதே : கிண்ணியாவில் றிசாத்

rishad ameer ali mahroof

 

சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி, புதிய ஆட்சி மாற்றத்துக்கு எமது கட்சி உதவியது என்றும், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் தலைமையிலான இந்த அரசை உருவாக்குவதற்கு நாம் கண்மூடித்தனமாகப் போய்ச் சேரவில்லை என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், கிண்ணியாவில் நேற்றிரவு (27/03/2016) இடம்பெற்ற, கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

ஆட்சி மாற்றத்துக்கு நமது சமூகம் முழுப் பங்களிப்பையும் செய்திருக்கின்றது. அரசியல் தலைவர்கள் ஆட்சி மாற்றத்துக்கு உதவுவதற்கு முன்னரே, புதிய மாற்றம் தேவை என்று எமது சமூகம் ஓரணியில் திரண்டது. எமது கட்சி, சமூகத்தின் தீர்மானம் சரி என்ற முடிவை எடுத்து, சமூக நன்மைக்காக மகிந்தவை விட்டு விலகிச் சென்று மைத்திரியை ஆதரித்தது. அன்றைய சூழ்நிலையில் அரசியல் தலைமைகள் ஒருபுறமும், முழு முஸ்லிம் சமூகமும் மைத்திரியின் பக்கம் நின்று, அவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, முஸ்லிம் சமூகத்துக்கு பூரண நன்மை கிடைத்திருக்கமாட்டாது என்றே நான் கருதுகின்றேன். ஏனெனில், அரசியல் தலைமைகள்தான் மக்களின் பிரச்சினைகளை எடுத்துச்சொல்லி அதனைத் தீர்த்து வைக்க முடியும். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் செய்தபோது, முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, மௌலவி,ஆசிரியர் பிரச்சினை, செறிவாக முஸ்லிம்கள் வாழும் இடங்களில் பிரதேச செயலாளர் பிரிவுகளை உருவாக்குதல், புதிய பிரதேச செயலகங்களை அமைத்தல், கல்விப் பிரச்சினை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுமென மைத்திரியும், ரணிலும் எமக்கு உறுதியளித்துள்ளனர். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதில் நாம் இன்னுமே நம்பிக்கையுடன் இருக்கின்றோம். 

எமது சிந்தனை, எமது மூச்சு எல்லாமே இந்த சமூகத்தைப் பற்றியதே. திருமலை மாவட்டத்தில் தோப்பூர், கந்தளாய், இறக்கக்கண்டி, குச்சவெளி, நிலாவெளி, மூதூர் மற்றும் கிண்ணியா போன்ற பிரதேசங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தபோது, அவர்கள் படுகின்ற வேதனைகளை அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் அரசியல் வாதிகளால் இந்த மக்கள் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது. நாம் வகுத்துள்ள முறையான செயற்திட்டங்கள் மூலம், இன்னும் மூன்று, நான்கு வருடங்களில் இந்தப் பிரதேசங்களை முன்னேற்றுவதற்கு வழி ஏற்படுமென நான் நம்புகின்றேன். கிண்ணியாவின் கல்விச் சமூகம் ஒன்றை சந்தித்தபோது, கல்வியில் கிண்ணியா வளையம் பின்னடைவாக இறுப்பதை அறிய முடிகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு நாம் உதவுவோம். 

கிண்ணியாவிற்கு வந்த பின்னர் அரசியலில் சில புதிய அனுபவங்களை நான் பெற்றுள்ளேன். நான் சார்ந்துள்ள கட்சியை பலப்படுத்துவதற்கு, இந்த அனுபவங்கள் எனக்கு உதவும். கிண்ணியா உலமாக்களை சந்தித்து சமூகம் தொடர்பான பயனுள்ள கருத்துக்களை கலந்துரையாடியுள்ளோம்.

எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும், உங்களின் பிரதிநிதியுமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கடந்த காலங்களில் பல்வேறு காட்சிகளில் அங்கம் வகித்து ஏமாற்றப்பட்டவர். அவர் எமது கட்சியில் இணைந்த பின்னர் புதிய உத்வேகம் பெற்று, உங்களுக்கு சிறந்த பணியாற்றி வருவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.