பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிப்பு!

4dc93323-597f-4b38-833f-5134c120e6ca_S_secvpfபெல்ஜியத்தில் கடந்த 22–ந்தேதி ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலும், வெடிகுண்டு தாக்குதலும் நடத்தினார்கள். அதில் 31 பேர் பலியாகினர். 316 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 7 தீவிரவாதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் 2 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் ஜெர்மனி, பெரு, சீனா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

பெல்ஜியத்தின் வெளியுறவு துறை மந்திரி டிதியா வண்டர்ஹாசெல்ட் இதனை தெரிவித்தார். குண்டு வெடிப்பை தொடர்ந்து பிரசல்ஸ் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், வெளியுறவு மந்திரி டிதியா வண்டர்ஹாசெல்ட் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த இக்கட்டான தருணத்தில் பெல்ஜியத்துக்கு துணை நிற்க அமெரிக்க உறுதிபூண்டுள்ளது என்றார்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள 40 நாட்டினரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா, சீனா, பெரு, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் பலர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.