கிழக்கில் ஐ.ம.சு.மு. பலமடைவதற்கு ஹிஸ்புல்லாஹ் பெரும் பங்காற்றியுள்ளார் : சுசில் !

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வளர்ச்சிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாரிய அர்ப்பணிப்புக்கள் செய்துள்ளதாகவும், 2008ஆம் ஆண்டு தேர்தலின் போது  அவருடன் யுத்ததாங்கிகளைக் கொண்டே நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் ஐ.ம.சு.முவின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
hizbullah
ஐ.ம.சு.மு. புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர தனது கடமையினை நேற்று உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றார். கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாரு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்தாவது,
2004 பெப்ரவரி 11 ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆரம்ப காலம் முதல் 2015 ஓகஸ்ட் மாதம் வரை நான் அக்கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றியுள்ளேன். இக்காலப்பகுதியில் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். 
நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் மேற்கொண்டமை மிகவும் கடினமான சூழலில். 2008ஆம் ஆண்டு தேர்தலின் போது யுத்ததாங்கிகளை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டே கிழக்கு மாகாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தோம். இச்சந்தர்பத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்களுக்கு பலமாக இருந்தார். 
கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. பலமடைவதற்கு அவர் பெரும் பங்காற்றியுள்ளார். அவர் துடிப்பு மிக்க முஸ்லிம் அரசியல் தலைவர். அவர் எப்போதும் எங்களுடன் தமது சமூகம் – பிரதேசத்தின் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்பவர். 
இவ்வாறான சிறந்த அரசியல் தலைமைகளுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கினோம். எனினும் சிலர் அதற்கு எதிராக செயற்பட்டமை கவலையான விடயமாகும். ஐ.ம.சு.மு. கிழக்கில் இரண்டு சிறுபான்மை முதலமைச்சர்களை உருவாக்கியுள்ளது. அது மட்டுமல்லாது நாங்கள் வடக்கில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளை உருவாக்கியுள்ளோம். இவை அனைத்தும் நான் பொதுச் செயலாளராக இருந்த போது எடுத்த சிறந்த தீர்மானங்களின் பிரதிபலிப்பாகும். என அவர் மேலும் தெரிவித்தார்.