பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை !

mahinda fonseka rajapaska_Fotor
 யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னரே நான் யுத்த வெற்றியை அறிவித்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

என்னை பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்களில் அந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பில் அப்போதைய இராணுவத் தளபதியும் இப்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

என்னை பழிவாங்கவும் எனது குடும்பத்தை தண்டிக்கவும் இந்த அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களுக்காக இன்று தண்டனை அனுபவித்து வருகின்றோம். எனது புதல்வர் யோஷித செய்யாத குற்றத்திற்காக சிறையில் உள்ளார்.

ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் மற்றைய புதல்வர் நாமல் ராஜபக்சவை கைதுசெய்ய அரசாங்கம் திட்டம் தீட்டுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு இருக்கையில் இப்போது பாராளுமன்றத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

யுத்த காலகட்டத்தை நாம் எவ்வாறு யுத்தத்தை முன்னெடுத்தோம், அதற்கான செலவுகள் என்ற அனைத்தும் சரத் பொன்சேகாவுக்கு நன்றாகவே தெரியும். அவர் அப்போதைய இராணுவத் தளபதி என்ற வகையில் எமக்கு பூரண ஒத்துழைப்புடன் செயற்பட்டார். அதை நான் மறைக்காமல் கூறியாகவேண்டும்.

ஆனால் அதையும் தாண்டி அவர் தனிப்பட்ட ரீதியில் செய்த தவறுகள் தொடர்பிலும் எம்மிடம் பதிவுகள் உள்ளன. அந்த காரணிகளை எல்லாம் நாம் ஊடகங்களிடம் முன்வைத்தால் இன்று அவருக்கு இருக்கும் கொஞ்ச மரியாதையும் பறிபோய்விடும்.

எவ்வாறு இருப்பினும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் யுத்தம் எப்போது முடிவுக்கு வந்தது, பிரபாகரன் கொல்லப்பட்டரா இல்லையா என்ற தகவலும் எனக்குத் தெரியும்.

சரத் பொன்சேகா மட்டுமே எமக்கு தகவல்களை முன்வைக்கவில்லை. இராணுவத்தின் பல வழிகளில் இருந்து எமக்கு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு கிடைத்துக்கொண்டு இருந்தன. சரத் பொன்சேகா உத்தியோகபூர்வ ரீதியில் ஒரு அதிகாரி மட்டுமேயாவர். அதை தவிர அவர் பல இரகசியங்களை அறிந்திருக்கவில்லை.

இப்போதும் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகளில் என்னையும் கோத்தபாய ராஜபக்சவையும் தண்டித்து பழிவாங்கப் பார்க்கின்றனர். அதற்கு உடந்தையாக சரத் பொன்சேகா செயற்படுகின்றார். தேசியப்பட்டியல் மூலம் ரணில் வாழ்க்கை கொடுத்துள்ளார். அந்த நன்றிக்கடன் இப்போது வெளிப்படுகின்றது.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரே நான் யுத்தம் முடிவடைந்ததை அறிவித்தேன். அவரது உடலை எமது இராணுவம் உறுதிப்படுத்தியது. தலையில் துப்பாக்கி ரவைகள் பட்ட நிலையில் தலை சிதைவடைத்து கிடப்பதாக புகைப்படங்களுடன் எனக்கு அந்த நேரத்திலேயே இராணுவம் தெரிவித்தது.

ஆனால் இவை நடந்த நேரம் சரத் பொன்சேகா எம்முடன் இருக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் அவர் கூறும் கதைகளை எவரும் நம்பப் போவதும் இல்லை. யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் என சித்தரித்து எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகளின் விளைவுகளே இவை அனைத்துமாகும்.

அதேபோல் விடுதலைப்புலிகளுக்கு நாம் பணம் கொடுத்ததாகவும் சுனாமி உதவி நிதி என்ற பெயரில் நாம் புலிகளை பலப்படுத்தியதாகவும் இன்று ஒரு சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால் இது முழுமையாக பொய்யாகும். நாம் புலிகளை பலப்படுத்த நினைத்திருந்தால் பிரபாகரனை கொன்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

நாட்டையும் மக்களையும் விடுவிக்கவும் பலமான நாடாக இலங்கையை கட்டியெழுப்பவுமே நாம் யுத்தத்தை தைரியமாக எதிர்கொண்டோம். எனக்கு முன்னிருந்த தலைவர்களால் முடியாத காரியத்தை நாம் செய்து காட்டியதே இன்று எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாத காரியமாக மாறியுள்ளது.

இப்போது இருக்கும் நிலைமையில் என்னை பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தாலும் ஆச்சரியமடைய வேண்டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்களில் அந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரும்.

எமது ஆட்சியை வீழ்த்தி இப்போது உருவாகியுள்ள புதிய அரசாங்கம் முழுமையாக பழிவாங்கல் அரசியலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்க பொய்யான ஆதாரங்களை திரட்டி தொடர்ச்சியாக எம்மை தாக்கி வருகின்றனர்.