சாய்ந்தமருது : வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி தருமாறு கோரி பிரதமருக்கு அவசரக் கடிதம் !

பி.எம்.எம்.எ.காதர்

 

 

  எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டி சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

மன்றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மத் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 

 

2-PMMA CADER-08-03-2016_Fotor

“சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் (2015) முடிந்த கையோடு பெற்றுத்தரப்படும் என்கிற வாக்குறுதி இதுவரைக்கும் நிறைவுக்கு வராமல் இருப்பது குறித்த கவலையான விடயத்தை இக்கடிதத்தின் மூலம் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

கடந்த 09.08.2015 ஆம் திகதி கல்முனை நகரில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரச்சார மேடையில் அமைச்சர் ரஊப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை தேர்தல் முடிந்த கையோடு நிறைவுக்கு கொண்டு வரப்படும் என தங்களினால் பகிரங்கமாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டமை தங்களுக்கு ஞாபகமிருக்கும்.

இதனை பிரதான இலக்காக கொண்டே தங்களது கட்சிக்கு வரலாறு காணாத வெற்றியினை இந்த மக்கள் பெற்றுத்தந்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதி பல மாதங்கள் கடந்தும் நிறைவுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனை நினைவுபடுத்தி சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றமாகிய நாம் உங்களுக்கு விரிவான கடிதம் ஒன்றினை தேர்தல் முடிந்த கையோடு உங்களது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தோம்.

இந்த சந்தர்பத்தில்தான் நீங்கள் அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 19.03.2016 ஆம் திகதி இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் வருகை தர இருப்பதாக அறிகிறோம். அதே மேடை- அதே மக்கள்- அதே வாக்குறுதி என்றில்லாமல் நீங்கள் இந்த நாட்டின் கனவான் அரசியல் தலைவர் என முழு நாடும் போற்றும் நிலையில் ஏனைய அரசியல் தலைமைகளை போலல்லாது கொடுத்த வாக்குறுதியை எத்தகைய இழப்புகள் நேர்ந்த போதிலும் காப்பாற்றும் சக்திமிக்க தலைவர், ஆனால் எமது சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி மாத்திரம் இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றமையானது எமது மக்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையினால் எதிர்வரும் 19ஆம் திகதிய உங்களது விஜயமானது சாய்ந்தமருது மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றிய நிலையில், கனவான் அரசியல் தலைமை என்பதை நிரூபித்த ஒரு பிரதமராக உங்களை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோம் என்பதனை உறுதிபட தெரிவிக்கிறோம்.

அத்துடன் உங்களது அம்பாரை மாவட்டத்துக்கான அந்த விஜயம் சாய்ந்தமருது மக்களுக்கான விடியலை பெற்றுத்தரும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமையட்டும் என வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.