தான் போக வழியில்லையாம் , மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு ஓடியதாம் !

ஹரீஸுக்கு வக்காலத்து வாங்கும் தவத்தின் கதை இது தான்…..

 

rauff hakeem harees athaullah cegu segu thavam slmc

 

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தவிசாளரும் பிரதியமைச்சருமான ஹரீஸின் பொட்டுக்கட்டுக்கள் வெளியே வந்ததை பொறுக்கமுடியாத தம்பி தவம் தனது முக நூலில் யார் யாரையெல்லாம் திட்டித் தீர்த்து பல்வேறு கதைகள் சொல்லியிருக்கின்றார். தம்பி தவம் சிறு பிள்ளையாய் இருக்கும் போதே நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தவன். 

இற்றைவரை காலமும் அக்கரைப்பற்றுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களின் வெளிப்பாடே எனது பகிரங்க மடல். நான் எதையோ சொல்லப்போக அதை திசை திருப்பும் நோக்கில் தம்பி தவம் “மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்” முடிச்சுப்போட்டுள்ளார்.

 அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதியயையும் பிரதமரையும் அழைத்து வரப்போகின்றார்களாம். அந்தக்கல்லூரிக்கு “ஒபாமாவை” அழைத்து வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. 

கல்முனைத் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரீஸ் அந்தத்தேர்தல் தொகுதியில் எத்தனையோ பிரபல பாடசாலைகள் இருக்கும் போது அக்கரைப்பற்றில் மாத்திரம் அக்கறைப்படுவதுதான் நகைப்புக்கிடமானது. அக்கரைப்பற்று அபிவிருத்தியில் ஹரீஸ் காட்டும் ஆர்வத்தை நினைக்கும் போது ”மூஞ்சூறு விளக்குமாற்றை காவிக்கொண்டு ஓடிய” கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. 

அக்கரைப்பற்றைப் பொறுத்தவரையில் தம்பி தவம் ஒரு கோடரிகாம்பாகவே கருதப்படுகின்றார். ஏனென்றால் அவர் முஸ்லிம் காங்கிரஸின் போராளியல்ல. விரும்பியோ விரும்பாமலோ அக்கரைப்பற்றின் ஆலமரமாக வளர்ந்து விருட்சமாக காட்சியளிக்கும் அதாவுல்லாவை வெட்டிச் சாய்ப்பதற்கு மு கா தெரிந்தெடுத்த கோடரிக் காம்பு தான் இந்தத் தவம். 

அவர் ஊரைக்காட்டிக்கொடுத்தவரென்ற பட்டத்தை சுமந்துள்ளார். சேகு இஸ்ஸதீனிடம் வளர்ந்து அவருக்கு குழி பறித்த பின்னர் அதாவுல்லாவுடன் இணைந்து அரசியல் செய்தவர்தான் இந்த தவம். பின்னர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு மு காவுக்கு தாவினார். 

மாகாண அமைச்சுப்பதவி தருவதாகவும் அதிகாரங்கள் வழங்குவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் பதவி ஆசை காட்டியதால் அந்தக் கட்சிக்கு தாவினார். 

அக்கரைப்பற்றில் மு கா தலைவரின் முகத்தில் கஞ்சியை ஊற்றும் போது நான் பட்ட வேதனையை அவர் ஒரு போதும் பட்டிருக்கமாட்டார். அந்த நேரத்தில் அவருக்கு எவரையாவது பிடித்து பதவி பெற வேண்டுமென்ற ஆசை மட்டுமே இருந்தது. அவருடைய பதவி வெறியை பகடைக்காயாக பயன்படுத்திய மு கா தலைவர் ஹக்கீம், ஹாபீஸையும் ஹசனலியையும்  அக்கரைப்பற்றுக்கு கூட்டி வந்து மேடையமைத்து தவத்திற்கு மாகாண அமைச்சுப்பதவி தருவதாக பகிரங்கமாக வாக்களித்தமையை அக்கரைப்பற்று வாழ் சமூகம் இன்னும் மறந்துவிடவில்லை. 

ஊர்த்தலைவனை வேரொடு பிடுங்கி எறிய கையாண்ட தந்திரம் தான் முஸ்லிம் காங்கிரஸின் இந்த நாடகம் என்பது இப்போது தான் எமக்கும் படிப்படியாக விளங்கி வருகின்றது. இது தான் நமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தவத்தின் மீது வைத்துள்ள அளவு கோல். ஊர்த் தலைவனான அதாவுல்லாவை சாய்ப்பதற்காக கல்முனையானும் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டிமுனை, ஒலுவில், இறக்காமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள அதாவுல்லா மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களும் முகம் தெரியாத விலாசமில்லாத தவத்திற்கு மாகாண சபையில் வாக்குகளை வாரி வழங்கினர். 

தவமென்றால் தமிழனாக இருப்பான். தோற்றாலும் அவனிடம் ஆயுதம் இருக்கும் என்ற நப்பாசையும் வேற்றூரார்களிடம் இருந்தது. அவர்கள் தவத்திற்கு அளித்த வாக்குகள் அவரது சொந்த வாக்குகளாக கருத முடியாது. 

தம்பி தவத்திற்கு நாம் ஒன்று கூற வேண்டும்,

“வண்டிலுக்கு கீழே செல்லும் நாயின் கதையைத்தான் எம்மால் உனக்கு உவமானம் காட்ட முடியும். வண்டிலை மாடு இழுக்க அதன் நிழலில் செல்லும் தெருநாய் நினைக்குமாம் தான் தான் அதனை இழுப்பதாக. இந்த அறியாமையை நினைத்து ஒரு கணம் நீ நின்று பார். வண்டிலை மாடு தான் இழுக்கின்றது என்பதை நீ உணர்ந்து கொள்வாய்”

நீ தொடர்ந்தும் ஊரில் அரசியல் செய்ய வேண்டுமானால் மாகாண சபை அமைச்சுடன் வா! அப்போது தான் எமது கட்சியான மு கா வில் உனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை மூத்த போராளிகளான நாம் நம்ப முடியும். அதை விடுத்து அக்கரைப்பற்று தொடர்பில் கல்முனை ஹரீஸும் மு காவிடம் சோரம் போயுள்ள நீயும் சிந்திப்பது “ குட்டி ஆடு குடலேறக் கொழுத்தாழும் வழுக்கல் வழுக்கல் தான்” என்ற உவமானத்திற்கு ஒப்பானது. 

எனவே இந்த உவமானத்தொடரை உண்மைப்படுத்த வேண்டுமானால் கல்முனையை ஹரீஸ் சொர்க்க புரியாக மாற்றுவதும் அக்கரைப்பற்றுக்கு மாகாண அமைச்சராக நீ வருவதிலும் தான் வருவதிலும் தான் தங்கியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மூத்த போராளி குத்தூஸ்