ஜனாதிபதி கடந்த ஒரு வருடமாக மிகவும் பொறுமையுடன் செயற்பட்டார் :லக்ஷ்மன் யாப்பா

maithiri
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைப்பாளர்களை நீக்கி வி்ட்டு, புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு வருடமாக மிகவும் பொறுமையுடன் செயற்பட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு வருடம் பொறுமையாக இருந்த ஜனாதிபதி இறுதியாக கடும் தீர்மானத்தை எடுக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியின் கைதியாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்க முயற்சிப்போர் தற்போது பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அறிக்கை கட்சியின் ஒழுக்கத்தை மீறிய நடவடிக்கை இல்லையா என ஊடகவியலாளர் ஒருவர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. எனினும் கட்சிக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். எவர் செய்தாலும் தவறு என குறிப்பிட்டுள்ளார்.