கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு கட்சித் தலைவர் அங்கீகாரம் – பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம் !

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில்… 

Joint-Opposition-Press-by-Romesh-Danushka-Silva-

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை நாடாளுமன்றின் கட்சித் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள பிரதமரும் ஜனாதிபதியும் இணங்கியுள்ளனர். 

நிலையியற் கட்டறை 23ஃ2 அடிப்படையில் விசேட உரையாற்றுவதற்கு கட்சித் தலைவர்களுக்கு இடமளிக்க இருவரும் இணங்கியுள்ளனர். 

இதனால் நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கவிருந்த போராட்டங்களை நிறுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் சுயாதீன ஓர் அலகாக இயங்குவதற்கு அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை தவிர்ந்த ஏனைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இது கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி நிலையியற் கட்டளை 23ஃ2 அடிப்படையில் நாடாளுமன்றில் விசேட உரையாற்ற முடியும். 

மேலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.  கோப் ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை நியமிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆணைக்குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விடவும் மேலதிகமாக 5 பேரை நியமிக்க கூட்டு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. விவாதம் நடாத்த போதியளவு கால அவகாசமும் வழங்கப்பட உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் நியாயமான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நாடாளுமன்றில் சிறந்த முறையில் சேவையாற்றப்படும். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்ளாவிட்டாலும் மெய்யான எதிர்க்கட்சியாக கூட்டு எதிர்க்கட்சி செயற்படும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.