மஹிந்தவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன !

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
mahintha itn anura

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. 

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய அனுர சிறிவர்தனவின் அனுமதியின் அடிப்படையில் இந்த விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. 

உயர் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்கவின் விசாரணைகளின் போது சுயாதீன தொலைக்காட்சியின் விற்பனை முகாமையாளர் திலிப் விக்ரமசிங்க இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்ட அதேவேளை, அப்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெருந்தொகை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டும் விளம்பரம் செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.