இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அரசாங்க தனியார் பயிற்சி நிலையங்களை தொடர்ந்து இயங்க தீர்மானம்!

சலீம் றமீஸ்

 

கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அரசாங்க தனியார் பயிற்சி நிலையங்களை தொடர்ந்து இயங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம்.

uthumaan

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அரசாங்க பயிற்சி நிலையங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை , அம்பாரை போன்ற பிரதேசங்களிலும், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் தனியார் பயிற்சி நிலையங்களும் இயங்கி வந்தன. இப் பயிற்சி நிலையங்கள் யுத்த சூழ்நிலையிலும் இயங்கி வந்தன. எமது மக்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்று அந்நிய செலவானியை நமது நாட்டிற்;கு பெற்று தருகின்றனர்.

 

‘ரட்டவிருவோ’ எனும் பெயரை வழங்கி வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு இவ் அலுவலகங்கள் ஊடாக பிரதேச மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வெளிநாடு செல்லும் திறனற்றவர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பயிற்சிகள், பணியகப்பதிவு, நலனோம்பல், வேவைகள், வெளிநாட்டில் வேலை செய்யும் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள், சித்தியடைந்தவர்களுக்கான நிவாரணக் கொடு;ப்பனவு, வெளிநாட்டில் காயம் அடைந்தவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான காப்புறுதி, நஷ்டஈடு போன்றவற்றை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளும் எமது பிரதேசத்தில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்தன. இதனால் கொழும்பு நகர் சென்று வரும் வீண் சிரமங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சென்ற 20.01.2016 ம் திகதியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து அரசாங்க, தனியார் பயிற்சி நிலையங்களையும் மூடிவிட்டு இனிமேல் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கள் பெற்று செல்பவர்களுக்கான பயிற்சிகளை தங்கல்ல, மத்துகம, கண்டி, பன்னிப்பிட்டி, இரத்தினபுரி, மீகொட போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாரை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரசாங்க பயிற்சி நிலையங்களையும் அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் பயிற்சி நிலையங்களையும் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் இயங்க வைப்பதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை கோரியே தனிநபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது.

 

இத்தனி நபர் பிரேரணை தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாரை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரசாங்க பயிற்சி நிலையங்களையும் அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் பயிற்சி நிலையங்களையும் தொடர்ந்தும் இயங்க வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி, பிரதமமந்திரி, மத்திய அரசாங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண சபை ஏகமனதாக கோரிக்கை விடுவதாக தீர்மானிக்கப்பட்டது.