றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள் !

றிசாத்தை தொடர்ந்து துரத்தும் பேரினவாதிகள் 

“கலகொட அத்தே ஞானசார தேரர்” 

இனவாதத்தின் மறு பெயர். முஸ்லிம் விரோத மொத்த வடிவம். BBS பொதுச் செயலாளர். இவர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தினார். குர்ஆனை தூசித்தார். பெருமானாரை பழித்தார். ஹலால், ஹராம், பர்தாவுக்கு தடை ஏற்படுத்த பிரயத்தனப்பட்டார். இனவாதத்தைக் கிளப்பி பெரும்பான்மையினரை உசுப்பேற்ற எத்தனித்தார். வில்பத்துவை அழித்து முஸ்லிம்கள் குடியேறுவதாக கதை அளந்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இயற்கை வளத்தை அழித்து, அரபுக் காலனி அமைப்பதாக அபாண்டப் பழிகளை சுமத்தினார். அவரது அமைச்சுக்குள் நுழைந்து அட்டகாசங்களில் ஈடுபட்டார். மறிச்சுக்கட்டி, கரடிக்குளி ஆகிய முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளில், அகதி முஸ்லிம்கள் அமைத்திருந்த கொட்டில்களை பிடுங்கி எரித்து காட்டுத் தர்பாரில் ஈடுபட்டார். மஹிந்தவின் நிழலில் நின்றுகொண்டு முஸ்லிம்களை பாடாய்ப்படுத்தினார். 

 

bbs poster

இத்தனை அட்டகாசங்களை அவர் மேற்கொண்திருந்த போதும் நிறைவேற்று அதிகாரம் கைகட்டி வேடிக்கை பார்த்தது. காக்கிச் சட்டைக்காரர்களும், கறுப்புச் சட்டைக்காரக்ளும், மஞ்சள் உடைக்கு அஞ்சினர். நீதி செத்து, அதர்மம் ஓங்கி நின்றது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பினர். அவனிடம் அழுது, தொழுது இறைஞ்சினர். மஹிந்த கவிழ்ந்தார். நல்லாட்சி மலர்ந்தது. நல்லாட்சியில் தேரர் இடைக்கிடை முஸ்லிம்களை சீண்டிப் பார்த்தார். எனினும், அவருக்கெதிராக முஸ்லிம்கள் பெரும் எடுப்பில் சட்டத்தை நாடவில்லை. 

இவ்வாறு முஸ்லிம்களை தொடர்ந்து புண்படுத்தி வந்த தேரர், இறுதியாக வாழை மரத்தில் தனது சொண்டை கொத்தியதால் இன்று அதனைக் கழற்ற முடியாது சிறைக்கம்பி எண்ணுகின்றார். 

இராணுவத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும், பெரும்பான்மையின ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி ஒருத்தியை தாறுமாறாக, கேவலமாக திட்டியமை, நீதிமன்றத்தை அவமதித்தமை ஆகிய சம்பவங்களால்  அவருக்கு இப்போது நேர்ந்திருக்கும் கதியே இது. “வாய்க்கொழுப்பு சீலையால் வடிகின்றது” 

இந்த விவகாரம் தொடர்பில் கைதாகிய தேரரும் பெரும்பான்மை இனம், அவரைக் கைது செய்தவரும் பெரும்பான்மை இனம், அந்தக் கைதுக்கான காரணங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணும் பெரும்பான்மை இனம். நீதி வழங்கியவரும் பெரும்பான்மை இனம். எனினும், இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லா,த சிறுபான்மை முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பேரினவாதிகள் அபாண்டமான பழிகளைச் சுமத்தி, குருநாகல் கலேவெல போன்ற சிங்களப் பிரதேசங்களில் சுவரொட்டிகளையும், துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளனர். “மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்” போட்டுள்ளனர். 

றிசாத் என்றால் இன்று இனவாதிகளுக்கு ஒரு வேப்பங்காய். முஸ்லிம் சமூகத்தில் முள்ளந்தண்டுள்ள தலைவராக, சமூக பிரச்சினைகளை தட்டிக் கேட்கும் திராணியுள்ள அரசியல்வாதியாக அவர் விளங்குவதே இந்தக் கசப்புக்கு காரணம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. மீனுக்கு தலையும், பாம்புக்கு வாலும் காட்டும், சமூகத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமை விலாங்குகள் போல் அவர் இருப்பதில்லை. அதுதான் இந்த சர்ச்சைக்குள்ளே அவரையும் இழுத்துப் போட்டு, அதனால் ஏற்படும் அழுத்தத்தின் மூலம், எவ்வாறாவது சிறைக்குள் இருக்கும் தங்கள் தலைவனை விடுவிப்பதே பேரினவாதிகளின் திட்டம். 

நீதிமன்றத்துக்கு கல்லெறிந்த, வில்பத்துவை அழித்து நாசமாக்கிய  றிசாத்தை வெளியே விட்டு விட்டு, சிங்கள சமூகத்தின் விடிவுக்காகவும், நாட்டுக்காகவும் போராடிய இராணுவ வீரர்களுக்காவும் குரல் கொடுத்த தேரரை சிறைக்கு உள்ளேயும் வைத்திருப்பதாக இவர்கள் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். முகநூல்களிலும், இணையத்தளங்களிலும் றிசாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் பெருமளவில் பரப்பி வருகின்றனர். பெரும்பான்மை இனத்தை இனவாதத்தால் உசுப்பி ஞானசார தேரர் வெளியே எடுப்பதுதான் இவர்கள் மேற்கொண்டுள்ள தந்திரம்.

பாதிக்கப்பட்ட உப்புக்குளம், கோந்தைப்பிட்டி மக்கள் தமக்கு நீதி வழங்குமாறு, மன்னார் நீதிமன்றத்தின் முன் களேபரத்தில் ஈடுபட்ட போது  றிசாத் கொழும்பிலேதான் அப்போது இருந்தார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் நடந்ததை கேள்வியுற்று, அவர் கொழும்பிலிருந்து அங்கு விரைந்தார். இந்த மன்னார் நீதிமன்ற சம்பவத்துக்கும், றிசாத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. நீதி மன்ற அவமதிப்பு வழக்கு என்ற பொய்யான குற்றச் சாட்டு நீதிமன்றத்தில் அவருக்கெதிராக தாக்கல் செய்யப்படிருந்த போதும் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். றிசாத்தை எப்படியாவது சிறைக்குள் தள்ள வேண்டுமென்று இனவாதிகளும் அவரது அரசியல் எதிரிகளும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் எதுவுமே பலிக்கவில்லை. 

அதேபோன்று வில்பத்துவில் ஓரங்குல நிலமேனும் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டிருந்தால், இயற்கை வளம்  அகதி முஸ்லிம்களால் அழிக்கப்பட்டிருந்தால் தான் பதவி விலகுவேன் என அவர் பகிரங்கமாக சூளுரைத்தார். வில்பத்து விடயத்திலும் இனவாதச் சூழலியலாளர்கள் பல்வேறு வழக்குகளை தொடுத்திருந்த போதும் எதையுமே நிரூபிக்க முடியாது தடுமாறுகின்றனர். 

தொலைக்காட்சி ஒன்றில் அமைச்சருடன் விவாதத்துக்கு வந்த இன்னுமொரு மஞ்சள் காவி மூக்குடைப்பட்டுப் போனதை பெரும்பான்மை உலகம் நன்கறியும்.

சட்டம் தற்போது தனது கடமையை சரிவரத்தான் செய்கின்றது. மஹிந்தவின் ஆட்சியில் செத்துக் கிடந்த நீதி இப்போதுதான் தழைக்கத் தொடங்கி இருக்கின்றது. தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணம்.                    

 

-அப்துல் ஜப்பார்-