அமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை!

Unknown

 

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு கடையை கொள்ளையடிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் கடைக்காரரை கொலை செய்த பிரான்டன் ஆஸ்டர் ஜோன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து குற்றவாளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியான நிலையில் கடந்த 36 ஆண்டுகளாக பிரான்டன் ஆஸ்டர் ஜோன்ஸ் இங்குள்ள ஜாக்சன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 12.46 மணியளவில் டாக்டர்கள் மற்றும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது மரண தண்டனை இது, என்பது குறிப்பிடத்தக்கது.