இன்றைய பிரித்தானிய தேர்தலின் எதிர்பார்ப்புக்களும் ,பீதிகளும் !

uk-election-2015 பிரித்தானியாவின் 56வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 தொகுதிகளுக்கு நடைபெறும் இத்தேர்தல் பிரித்தானியாவில் மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றிய வட்டகையிலும் மிகவும் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது.

 2011இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய நிர்ணயிக்கப்பட்ட திகதியிலேயே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற வகையில இத்தேர்தல் ஐந்து ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது. 

 2010 மே 6ஆம் நாள் நடைபெற்ற தேர்தலிலில் கொன்சவேட்டிவ் 306 தொகுதிகளையும் லேபர் 258 தொகுதிகளையும் லிபரல் டெமொகிரெட் 57 தொகுதிகளையும் ஸ்கொட்டிஸ் நாசனல் கட்சி 6 தொகுதிகளையும் ஏனையவை 23 தொகுதிகளையும் வென்றன. 

 எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையான 326 தொகுதிகளை வெல்லதாத காரணத்தால் கூட்டாட்சி அமையும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் கொன்சவேட்டிவ் கட்சியும், லிபரல் டெமொகிரட் கட்சியும் இணைந்து பெருன்பான்மை ஆட்சியை கடந்து ஐந்து ஆண்டுகளாக அமைத்தன. 

இந்நிலையில் இன்று நடைபெறும் தேர்தலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  

நடந்து முடிந்துள்ள கடும் பரப்புரைகளில் பின், முன்னணியில் உள்ள கொன்சவேட்டிவ் கட்சியும், லேபர் கட்சியும் சம ஆதரவுத்தளத்துடன் கடும் போட்டியில் உள்ளன. 

இரண்டில் எந்தவொரு கட்சியும் 300 ஆசனங்களை பெறமுடியாத நிலையும், இரண்டுக்கும் இடையே 10 முதல் 20 வரையிலான ஆசன வித்தியாசமே இறுதியில் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் இம்முறையும் தனி ஒரு கட்சியின் அறுதிப்பெருன்பான்மையற்ற தொங்கு பாராளுமன்றமே அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்தமுறை போன்று இரண்டு கட்சிகள் சேர்ந்து பெரும்பான்மை அமைக்கும் சூழலும் ஏற்படாது. அதனால் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகளின் சேர்ப்பும் அத்தியாவசியமாகின்றது. 

கடந்;த முறை 23 சதவீத மக்கள் ஆதரவைப்பெற்று 57 தொகுதிகளுடன் அபிர்த வளர்ச்சியைக் காண்பித்த லிபரல் டெமொகிரட் கொன்சவேட்டிவுடன் அமைத்த கூட்டாச்சியால் மக்களிடன் இழந்த ஆதரவை மீண்டும் பெற முடியவில்லை. அதன் மக்கள் ஆதரவு 9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது மட்டுமன்றி 20 முதல் 25 தொகுதிகளையே வெல்லும் நிலையில் உள்ளது. 

மீண்டும் அறுதிப் பெரும்பாண்மை ஆட்சி என்ற லேபர் கட்சியின் கனவை ஸ்கொட்டிஸ் தேசியக்கட்சி தவிடு பொடியாக்கியுள்ளது. 

ஸ்கொட்லாண்டில் உள்ள 59 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளையே கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்கொட்டிஸ் தேசியக்கட்சிக்கு இம்முறை பெரும் அலையே அங்கு வீசுகிறது. அதனால் அக்கட்சி 50க்கு மேற்பட்ட தொகுதிகளை அங்கு வெல்லும் நிலையில் உள்ளது. இது வழமையாக லேபர் கட்சியின் கோட்டையாகும். 

இந்நிலையில் பிரிவினைவாதத்தை முதன்மைப்படுத்தும் கட்சிக்கு பிரித்தானியாவின் எதிர்கால ஆட்சியை தீர்மானிக்கும் வாய்ப்பு அதிக மாக வாய்த்து பலம்பொருத்திய ஒரு சக்தியாக ஸ்கொட்டிஸ் தேசியக்கட்சி மாறியுள்ளது. இது பிரித்தானியாவில் வாழும் மக்களில் பலரிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது. 

இதே போன்று தான் கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்கைப் பெற்ற யு.கே சுயேற்சைக்கட்சி இம்முறை 11 சதவீத ஆதரவுடன் வளர்ந்து நிற்பது கொன்சவேட்டிவ் கட்சிக்கு சவாலாக மாறியுள்ளது. 

குடுயேற்றவாசிகளுக்கு எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு என கடும் வலதுசாரிப்போக்கை கொண்ட இக்கட்சி கடந்த தேர்தலில் எந்தவொரு தொகுதியை வெல்லாவிட்டாலும் பின்னர் நடந்த இரண்டு இடைத்தேர்தலிகளில் இரு தொகுதிகளை சென்றது. இம்முறையும் ஐந்திற்கு குறைவான தொகுதிகளையே வெல்லும் நிலையில் அது உளளது. 

இதைவிட வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் உள்ள பிராந்தியக்கட்சிகளும் 10க்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தம் பிராந்தியம் சார்ந்து கடந்த தேர்தல் போன்று வெல்லும் நிலையிலேயே உள்ளன. 

இந்நிலையில் ஆட்சியமைக்கப்போவது யார்? என்பதே தற்போதுள்ள பிரதான கேள்வியாதும். கொன்சவேட்டிவ் அல்லது லேபர் தலைமையிலேயே மட்டுமே அவ்வாட்சி அமையும் சாத்தியமும் உள்ளது. 

அதில் பிரதான பங்கை லிபரல் டெமொகிரட்டும், ஸ்கொட்டிஸ் தேசியக்ட்சியும் வகிக்கும். அத்துடன் இரண்டு கட்சிகள் இணைந்து சிறுபான்மை ஆட்சி ஒன்றை அமைக்கும் சாத்தியமும் அதிகம் காணப்படுகின்றது. 

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதா? இல்லையா? என்பது குறித்து தான் ஆட்சிக்கு வந்தால் 2017இல மக்கள் கருத்துக்கணிப்பை நடாத்தப் போவதாக கொன்சவேட்டிவ் கட்சி தேர்தல் பரப்புரையில் அறிவித்தமை ஐரோப்பிய ஒன்றிய வட்டகைளில் பீதியை கிளப்பியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான நாடான பிரித்தானியா இன்றுவரை பல விடயங்களில் தனது தனித்துவத்தை பேணியே வருகின்றது. இந்நிலையில ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுமானால் இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சாவுமணியாக மாறிவிடும் என்ற அச்சம் எங்கும் பரவலாக உள்ளது. 

இந்நிலையிலேயே உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதீத கவனத்தை ஈர்ந்தவாறு பிரித்தானிய மக்கள் வாக்களிப்பில் கல்ந்து கொள்கின்றனர். 

பிரித்தானியா அரசியலில் தாக்கம் செலுத்தும் ஒரு மக்கள் சமூகமாக மாறியுள்ள தமிழ் மக்களும் பிரதான கட்சிகளின் கவனத்தை ஈர்ந்தவாறு வாக்களிக்க உள்ளனர்.