ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து அரசாங்கம் விலக முடியாது !

st_tna
 தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜெப்டொ, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்ற கட்டட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது உத்தேச அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

பொறுப்பு கூறல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்,

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது எனவும் அந்த பிரேரணையில்  குறிப்பிடப்பட்ட  விடயங்களை நடைமுறைப்படுத்த  வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய  வகையில் அமைய  வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் அக்கறையுடன் இருப்பதாக கூறிய தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், தென்னாபிரிக்கா அரசானது இந்த விடயம் தொடர்பில் எந்த வேளையிலும் தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார் .

இந்நிலையில் நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் இலங்கைக்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.