உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும் !

நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ் அவர்களிடம் தெரிவித்தார்.

02_Fotor

இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில் உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹக்கீம் உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.
தென்னாபிரிக்கா உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், அமைச்சர் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். உயர் ஸ்தானிகராலய அரசியல் ஆலோசகர் செல்வி சி.ஜொபேர்ட் அவர்களும் இதில் பங்குபற்றினார்.

03_Fotor
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தென்னாபிரிக்கா நீண்ட காலமாக அதிக கரிசனை செலுத்தி வருவதோடு, நிற வேற்றுமை, இன முறுகல் என்பன ஆழமாக வேரூன்றியிருந்த தென்னாபிரிக்காவில் சுமூக நிலைமை ஏற்படுவதற்கு பங்களிப்புச் செய்த ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ வின் அனுபவம் இலங்கை போன்ற நாடுகளுக்கும் சிறந்த முன் உதாரணமாக திகழ்வதாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது பற்றி அமைச்சர் ஹக்கீம் உயர் ஸ்தானிகரிடம் சிலாகித்துக் கூறினார்.
தேசிய அரசாங்கத்தின் சிறந்த அணுகுமுறையின் பயனாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் ஜெனீவா பிரேரணையில் மாற்றம் ஏற்பட்டது குறித்தும் அமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு வாய்ப்பாக பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாகவும் செயல்பட இருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியதோடு, ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மையாக கொண்ட அரசாங்கமும், அதனுடன் ஒத்துழைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவினரும் சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அதனை குழப்புவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எத்தனிப்பதையிட்டு விசனம் தெரிவித்தார்.

06_Fotor
வடக்கு,கிழக்கு இணைப்புக்கான சாத்தியப்பாடுகள் எவையும் உண்டா எனவும் அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்குமெனவும் தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் வினவிய போது, பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் வடக்கு,கிழக்கு இணைப்புக்கோ அல்லது வடக்கிலிருந்து கிழக்கை பிரிப்பதற்கோ முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசனை பெறப்படவில்லை என்றும், சர்ச்சைக்குரியதும் சிக்கலானதுமான அந்த விடயத்தில் கருத்துக் கூறவேண்டிய அவசியம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும் கூறினார்.
இனப் பிரச்சினை தீர்வுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஆதரவு நல்குவார்கள் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
தென்னாபிரிக்க அரசியலமைப்பின் கையடக்கமான பிரதியொன்றையும் உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ் அமைச்சர் ஹக்கீமிடம் கையளித்தார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் பங்குபற்றினார்.
தென்னாபிரிக்கா உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் ஆகியவற்றிலும் ஏககாலத்தில் தூதுவராக பணியாற்றிவருகின்றார்.

ஜெம்சாத் இக்பால்